உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திறப்புவிழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத சுகாதார நல மையம்

திறப்புவிழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத சுகாதார நல மையம்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி பராசக்தி காலனியில் நகர் புற சுகாதார நல மையம் கட்டப்பட்டு திறப்பு விழா கண்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.சிவகாசி மாநகராட்சி பராசக்தி காலனியில் நகர்புற நல்வாழ்வு மையம் திட்டத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் ரூ.22 லட்சத்தில் நகர் புற சுகாதார நல மையம் கட்டப்பட்டது. மேலும் இதில் நகர பொது சுகாதார ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளது.பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 2024 ஜன. 5ல் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். ஆனால் இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதில் எக்ஸ் ரே ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்பட்டது. ஆனால் சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், உதவியாளர்கள் என எந்தப் பணியிடமும் நிரப்பப்படவில்லை. மேலும் மருத்துவ உபகரணங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் சிறிய காய்ச்சல், தலைவலி என்றால் கூட அதிக துாரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் அலைய நேரிடுகின்றது. எக்ஸ்ரே ஸ்கேன் போன்றவைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் கொடுத்து எடுக்க வேண்டியுள்ளது. மேலும் கர்ப்பிணிகளுக்கு உடனடி முதலுதவி சிகிச்சைக்கும் வழி இல்லை. நீண்ட நாட்கள் கட்டடம் பயன்பாட்டில் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகின்றது. இதே நிலை நீடித்தால் பயன்பாட்டிற்கு வராமலேயே கட்டடம் சேதம் அடையவும் வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பி மருத்துவ உபகரணங்கள் ஏற்படுத்தி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ