கால்வாயில் சீமைக் கருவேல மரங்கள்
சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி கண்மாயிலிருந்து ஆனைக்கூட்டம் வழியாக செல்லும் கால்வாயில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து இருப்பதால் மழைநீர் செல்ல வழி இல்லை. எனவே சீமைக் கருவேல மரங்களை அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணியில் பெரிய கண்மாய் உள்ளது. மழைக்காலங்களில் கண்மாய் நிறையும்போது தண்ணீர் வெளியேறி செல்வதற்காக ஆனைக்குட்டம் வழியாக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. கண்மாய் தண்ணீரில் மழை நீரும் கால்வாய் வழியாகச் சென்று சாத்துார் அருகே வைப்பாற்றில் கலக்கும். மேலும் ஆனைக்கூட்டம் பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் கால்வாய் உள்ளது. இதில் செல்லும் தண்ணீரை நம்பி இப்பகுதியில் சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றது. ஆனால் தற்போது கண்மாய் முழுவதுமே இடைவெளியின்றி சீமைக் கருவேல மரங்கள் முழுமையாக ஆக்கிரமித்து உள்ளது. இதனால் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் செல்ல வழி இல்லை. எனவே கால்வாயில் ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.