அருப்புக்கோட்டை நகராட்சியில் ஏலதாரர்கள் பிரச்னையால் கடைகள் ஏலம் ஒத்திவைப்பு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி கடைகள் ஏலம் விடுவதில் பிரச்னை ஏற்பட்டதால் கடைகள் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை --மதுரை ரோட்டில் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. இதில் 43 நகராட்சி கடைகள் உள்ளது. இவற்றில் 2 கடைகள் ஆவின் பாலகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 ம், ஏற்கனவே பஸ் ஸ்டாண்டில் கடை வைத்திருப்பவர்கள் 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக வைத்திருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 14 கடைகள் போக, மீதமுள்ள கடைகளுக்கு பொது ஏலம் அறிவிக்கப்பட்டு நேற்று ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பொது ஏலதாரர்கள் ஒவ்வொரு கடைக்கும் ரூ. 7 லட்சம் டெபாசிட் கட்டிய நிலையில் ஏலத்தில் கலந்து கொள்ள வந்தனர். ஏற்கனவே கடை வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் முதலில் ஏலம் விடுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்த நிலையில், பொது ஏலத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என ஆட்சேபனை தெரிவித்தனர். தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டதால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.இதுகுறித்து டெபாசிட் கட்டி ஏலத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் : முதலில் ஏற்கனவே கடை வைத்துள்ளவர்களுக்கு உரிய கடைகளை ஒதுக்கி வைத்து விட்டு பின்னர் எத்தனை கடைகள் ஏலம் விடப்படுகிறது என்பதை நகராட்சி நிர்வாகம் முறையாக தெளிவாக அறிவிக்கவில்லை. நாங்கள் ஏலத்தில் எடுக்க போகும் கடைகளை ஏற்கனவே கடையை வைத்திருந்தவர்கள் எடுத்திருந்தால் கடை யாருக்கு என்ற பிரச்னை வரும். தெளிவாக நகராட்சி எங்களுக்கு அறிவிக்கவில்லை. முன்னுரிமை அடிப்படை தவிர எத்தனை கடைகள் ஏலம் விடப்படுகிறது, கடை எண் உள்ளிட்டவர்களை தெளிவாக எங்களுக்கு விளக்க வேண்டும். இதுகுறித்து நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம்: நகராட்சிகளின் விதிகளின்படி, ஏற்கனவே கடை வைத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நாங்கள் வழங்குகிறோம். இதில் மற்ற கடைகளுக்கு ஏலம் எடுக்க வந்தவர்கள் பிரச்னை செய்ததால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டு முறையான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்.