டூவீலர் ஸ்டாண்டாக மாறிய சிவகாசி பஸ் ஸ்டாண்ட்: பயணிகள் அவதி
சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்ட் வளாகம் டூவீலர் ஸ்டாண்ட் ஆக மாறியதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். சிவகாசி பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் 200 க்கும் மேற்பட்ட முறை அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. சாத்துார், விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து பல்வேறு பணி நிமித்தமாக தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்துமிடம் , பயணிகள் நடமாடும் இடங்களில் அதிக அளவில் டூவீலர்கள் நிறுத்தப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே டூவீலர்களுக்கு என பார்க்கிங் வசதி இருந்தும் ஒரு சிலர் பஸ் ஸ்டாண்டிலேயே நிறுத்தி விடுகின்றனர். தவிர அவ்வப்போது கார்களும் நிறுத்தப்படுகிறது. இதனால் பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இட நெருக்கடியால் பஸ்கள் தட்டு தடுமாறியே செல்ல வேண்டியுள்ளது. பஸ் ஏறுவதற்காக செல்லும் பயணிகள் டூவீலர்களால் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் ஸ்டாண்டிற்குள் டூவீலர்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.