உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நான்கு வழிச்சாலை அமைக்க ரோட்டோர மரங்கள் கணக்கெடுப்பு

நான்கு வழிச்சாலை அமைக்க ரோட்டோர மரங்கள் கணக்கெடுப்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக ரோடு ஓரங்களில் உள்ள மரங்களை அப்புறப்படுத்துவதற்காக வனத்துறையினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். அருப்புக்கோட்டையின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இருக்கிற ரோடுகளை அகலப்படுத்தவும், நான்கு வழிச்சாலையாக மாற்றவும் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி விருதுநகர் ரோட்டில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் இருந்து அருப்புக்கோட்டை எல்லையில் உள்ள அணுகுச்சாலை வரையிலான 3 கி.மீ., துாரம் உள்ள ரோடும், நகரில் தேவாங்கர் கலை கல்லுாரி பகுதியில் இருந்து, ராமலிங்க மில் சந்திப்பு வரையுள்ள 3 கி.மீ., துாரம் மொத்தம் 6 கி.மீ., ரோடு நான்கு வழி சாலையாக மாற்றப்பட உள்ளது. இதற்காக 44.50 கோடி ரூபாய் நிதி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ரோடு 15 மீட்டர் அகலத்தில் நடுவில் சென்டர் மீடியன் உடன் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே உள்ள ரோட்டின் இருபுறமும் பல ஆண்டுகளுக்கு முன்பு வளர்க்கப்பட்ட மரங்களை அகற்றுவதற்கு பசுமை ஆணையத்திற்கு நெடுஞ்சாலைத்துறை கருத்துரு கேட்டுள்ளது. இதன்படி, 6 கி.மீ., ரோட்டில் 176 புளியமரம், வாகை, வேங்கை உள்ளிட்ட மரங்கள் உள்ளன. முதற்கட்டமாக வனத்துறையினர் இந்த மரங்களை அளவு அளவு எடுக்கும் பணியினை செய்து வருகின்றனர். வன துறையினரின் முழு அறிக்கை பசுமை ஆணையத்திற்கு வழங்கப்பட்ட பின், அதற்கான தொகை உள்ளிட்ட விபரங்கள், ஒரு மரத்திற்கு 10 மரங்கள் வளர்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதலுடன் ஆணையம் பரிந்துரை செய்த பின் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடக்கும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை