ஆசிரியர் கவுன்சிலிங்கால் தாமதம்; இளம் பசுமை ஆர்வலர் திட்டம்
விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் ஆசிரியர்கள் கவுன்சிலிங்கால் இடமாறுதல் நடந்தது. இதனால் இளம் பசுமை ஆர்வலர் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் விரைந்து துவங்கி மாணவர்களுக்கு பசுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாவட்டத்தில் 2024-25 கல்வியாண்டில் அரசு, உதவிபெறும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இளம் பசுமை ஆர்வலர் முகாம் நடத்தப்பட்டு அதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு பயிற்சி முகாமில் இயற்கை சூழல் பாதுகாப்பு, மரம் வளர்த்தல், அரிய வகை பூச்சி இனங்களின் நன்மைகள், நீர்வளப் பாதுகாப்பு, வனவிலங்குகள், காடுகளின் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றியும், பாதுகாப்பு பற்றியும் பயிற்சி அளிக்கப்படும். இந்நிலையில் முதற்கட்டமாக இதற்கு 40 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் தேர்வு செய்த மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கும் பயிற்சி அளித்தனர். இதுவரை இத்திட்டத்தில்5 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்றனர். மேலும் அம்மாணவர்களைஆனைமலை, செண்பகத்தோப்பு, குல்லுார்சந்தை, ராம்கோ சுற்றுச்சூழலில் பூங்கா போன்ற இயற்கை சூழல் பகுதிகளுக்கு அழைத்து சென்றது மாவட்ட நிர்வாகம். இந்நிலையில் 2025-26 கல்வியாண்டு துவங்கி காலாண்டு வர உள்ளது. இளம் பசுமை ஆர்வலர் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு மாதமாக முகாம்களில் பங்கேற்காமல் உள்ளனர். துவக்கத்தில் இரு முகாம்கள் நடத்தப்பட்டன. அதற்கு பின் ஆசிரியர்கள் இடமாறுதலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தால் பல மாணவர்கள் ஸ்மார்ட் போன்களை மறந்துஇயற்கை மீது ஆர்வம் கொண்டு பூச்சி, செடி வகைகளை தாமாக கண்டறிந்தது குறிப்பிடதக்கது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரி கூறியதாவது: கவுன்சிலிங்கால் ஏற்கனவே பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இடமாறுதல் ஆனதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் ஆர்வலர் திட்டம் துவங்கி மாணவர்களுக்கு முகாம் நடத்தப்படும், என்றார்.