தர்பூசணிகளில் கலப்படமில்லை தோட்டக்கலைத்துறை தகவல்
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட தர்பூசணிகளில் கலப்படமில்லை. அவ்வாறு செய்வதாக பரவிய தகவல்கள் தவறானவை என தோட்டக்கலை துணை இயக்குனர் சுபாவாசுகி தெரிவித்தார்.அவரது செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் தர்பூசணி பழப்பயிர் 20.40 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விதைக்கப்பட்டு கோடைக்காலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அறுவடைக்கு வரும். வெயில் காலங்களில் மக்களுக்கு பயன்படும் வகையில் சந்தைகளில் விற்பனை செய்யப்படும். அனைவரும் விரும்பி உண்ணும் இப்பழத்தில் கலப்படம் செய்யப்படுவதாக பரவியது. இது உண்மைக்கு முரணானது.தோட்டக்கலை துறை அதிகாரிகள்பழங்களை பறித்து உணவு பாதுகாப்புத்துறையுடன் இணைந்து ரசாயன ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் தர்பூசணி பழங்களின் நிறம், சுவைக்காக எவ்வித செயற்கை ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.இதில் இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, பி1, பி6, போன்ற நுண்ணூட்ட சத்துக்களும், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகளவில் உள்ளதால் உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.தக்காளி, சிவப்பு கொய்யா, திராட்சை போன்ற பழங்களில் உள்ளது போல் தர்பூசணி பழத்திலும் இயற்கையாகவே லைகோபீன் எனப்படும் இயற்கை மூலப்பொருள் உள்ளதால் சிறப்பு திறத்தில் காணப்படுகிறது. இந்த லைகோபீன் கண்பார்வை திறனை அதிகரிக்கிறது.இத்தகைய சத்துக்கள் நிறைந்த தர்பூசணியை கலப்படம் செய்வதாக பரவிய தவறான வதந்திகளை நம்பாமல் அனைவரும் உண்டு பயனடையலாம், என்றார்.