| ADDED : ஆக 01, 2011 11:16 PM
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று மாலை கரை திரும்பினர். ராமேஸ்வரத்திலிருந்து கடந்த ஜூலை 30 ல், கடலுக்கு மீன்பிடிக்க, பால்ராஜ் என்பவரின் படகில் சென்ற செல்லத்துரை, குமரவேல், அரசுப்பாண்டி உட்பட ஐந்து மீனவர்கள் கரை திரும்பாததால் உறவினர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது. அவர்களை தேடி சென்றவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். இந்நிலையில்,நேற்று முன்தினம் (ஆக., 31) இலங்கை கடல் பகுதியிலுள்ள மணல் திட்டில் பழுதாகி நின்ற படகை, அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீட்டு, படகில் இருந்த மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். இரவில் தலைமன்னார் முகாமில் தங்கவைக்கப்பட்ட மீனவர்கள் குறித்து இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தூதரக அதிகாரிகளின் நடவடிக்கையால், நேற்று பகல் 11.30 மணிக்கு இந்திய கடல் எல்லையில், இந்திய கடலோர காவல்படையினரிடம், ஐந்து மீனவர்களையும், இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். கடலோர காவல் படையினரால் அழைத்து வரப்பட்ட ஐந்து மீனவர்களும், நேற்று மாலை மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு வந்து சேர்ந்தனர். அதிகாரிகளின் விசாரணைக்குப்பின், மீனவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.