ராமநாதபுரம்:கடலோரங்களில் இறந்தது போல காணப்படும் 'டெட்ரோடான்' மீன், கையில் எடுத்தால் விஸ்வரூபம் எடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.மன்னார் வளைகுடாவில் தான், 'டெட்ரோடான்' என்ற வினோத மீன் உள்ளது. கையடக்கமானது. பொதுவாக, கடலோரங்களில் இறந்ததுபோல் ஒதுங்கி இருக்கும். என்னவென்று கையில் எடுத்தால் போதும், விஸ்வரூபம் எடுத்து விடும்.கை கொள்ளாத அளவுக்கு, ஊதிய பலூன் போல், தன்னுள் காற்றை நிறைத்து ஊதிவிடும். இந்த திடீர் மாற்றத்தால், நாம் தடுமாறுவோம்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கையிலிருந்து நழுவி, கடலுக்குள் சென்று தன்னைக் காத்துக்கொள்ளும். வாய்ச் சொல்லில் வீரர்போலத் தான் இதுவும். ஆனால், இது ஒரு நச்சுமீன்.'டெட்ரோடோடாக்சின்' என்னும் நச்சுப்பொருள், இம்மீனின் ஈரலில் உள்ளது. இதைத் தொட்டாலோ, எடுத்தாலோ, நச்சால் ஒன்றும் ஆவதில்லை. ஆனால், நச்சை நீக்காமல் உண்டாலோ, உண்டவர் சுருண்டு மாண்டு போவார். ஜப்பானியருக்கு, இந்த மீனின் மீது தனி மோகம். நச்சை நீக்கிய பின்னரே உண்ணுகின்றனர்.கை தேர்ந்தவர்கள் மட்டுமே, முறையாக நச்சை நீக்க முடியும். கடந்த 2002ல் மட்டும்,, இம்மீனை உண்டவர்களில் 56 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், மாண்டவர் ஆறு பேர்.இனி, மன்னார் வளைகுடா கடற்கரையில், ஒதுங்கியதைத் தொடும் முன், நிறையவே யோசிக்க வேண்டும்.