வேப்பூர்:வேப்பூரில் அரசு பஸ்சில் 13கிலோ கஞ்சா கடத்தி வந்த மத்திய அரசு ஊழியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலி புறப்பட்ட அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி செல்வதாக, கடலுார் எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், எஸ்.பி., தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை சோதனை செய்தனர்.நேற்று நள்ளிரவு 1:00 மணியளவில் வேப்பூர் சர்வீஸ் சாலையில் திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 13 கிலோ எடையுள்ள கஞ்சா பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது. உடன் கஞ்சா பாக்கெட்டுகள் மற்றும் கடத்தி வந்த நான்கு வாலிபர்களை, போலீசார் பிடித்து, வேப்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், திட்டக்குடி அடுத்த ராமநத்ததை சேர்ந்தவர் கார்த்திக், 24; தொழுதுாரை சேர்ந்த சக்திவேல், 25; லோகநாதன், 22; புலிகரம்பலுாரை சேர்ந்த மணிவண்ணன், 23; எனத் தெரியவந்தது. அதில், சக்திவேல் என்பவர் போஸ்ட்மேனாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 8 மாதங்களாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. நண்பர்களான இவர்கள் தொழுதுார் , திட்டக்குடி பகுதிகளில் கஞ்சா விற்று வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஒடிசா மாநிலத்திற்கு கஞ்சா வாங்க சென்றுள்ளனர். அங்கு கஞ்சா கிடைக்காததால் ஆந்திரா மாநிலம், சூலுார்பேட்டையில் கஞ்சா வியாபாரிடம் ரூ. 2 லட்சத்திற்கு 13கிலோ கஞ்சாவை வாங்கியுள்ளனர்.அதில் ரூ. 20 ஆயிரத்தை முன்பணமாக கொடுத்து மீதி பணத்தை வங்கி கணக்கில் அனுப்புவதாக கூறி புறப்பட்டனர். சூலுார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்து, சென்னையிலிருந்து ராமநத்ததிற்கு அரசு பஸ்சில் பயணம் செய்தது தெரிந்தது.அவர்களிடம் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 13கிலோ கஞ்சா மற்றும் 4 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, கார்த்திக், சக்திவேல், லோகநாதன், மணிவண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.