| ADDED : ஜூன் 01, 2024 02:18 AM
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜிநகரில் கடன் பிரச்னையால் மகன், மகள், பேத்தியை கொலை செய்து ஆசிரியர் தம்பதி தற்கொலை செய்த வழக்கில் அவர்களை தற்கொலைக்கு துாண்டியதாக வட்டிக்கு பணம் கொடுத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.பாலாஜிநகரைச் சேர்ந்தவர் லிங்கம் 45. மனைவி பழனியம்மாள் 47. இருவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள். இவர்களது மகள் ஆனந்தவள்ளி 27, மகன் ஆதித்யா 14. ஆனந்தவள்ளிக்கு திருமணமாகி சஷ்டிகா (2 மாதம்) குழந்தை உள்ளது. ஆதித்யா சிவகாசியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடன் பிரச்னையால் மே 22 ஆதித்யா, ஆனந்தவள்ளி, சஷ்டிகா ஆகியோருக்கு விஷம் கொடுத்து லிங்கம், பழனியம்மாள் துாக்கிட்டு தற்கொலை செய்தனர்.போலீஸ் விசாரணையில் கடன் பிரச்னையால் லிங்கம் 2 மாதங்களுக்கு முன் துாக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். லிங்கம் அளித்த வாக்குமூலத்தில் கடன் வாங்கிய சிலரது பெயரை குறிப்பிட்டு அவர்களின் மிரட்டலால் தான் தற்கொலை முயற்சி செய்ததாக தெரிவித்திருந்தார். இது வீடியோவாக போலீசாரால் பதிவு செய்யப்பட்டிருந்தது.இதன் அடிப்படையில் நேற்று லிங்கத்திற்கு கடன் கொடுத்தவர்களில் ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்த அருண்குமார் 43, திருத்தங்கல் கிருஷ்ணன் 42, கொங்கலாபுரம் வி.முருகன் 61, எம்.புதுப்பட்டி எஸ்.முருகன் 53, மணிவண்ணன் 43, சித்துராஜபுரம் ரமேஷ்குமார் 44, ஆகியோரிடம் டி.எஸ்.பி., சுப்பையா மற்றும் போலீசார் விசாரித்தனர். ஆறு பேர் மீதும் தற்கொலைக்கு துாண்டுதல், கந்துவட்டி தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.டி.எஸ்.பி., கூறுகையில், ''லிங்கத்திற்கு வட்டிக்கு பணம் கொடுத்த மேலும் சிலர் விசாரிக்கப்பட உள்ளனர். அதிக வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.