| ADDED : மே 08, 2024 11:00 PM
திருநெல்வேலி:திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், 58, மே 2 இரவில் வீட்டிலிருந்து காரில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பின், எரிந்த நிலையில் கரைசுத்துபுதுாரில் அவரது தோட்டத்திலேயே இறந்து கிடந்தார்.உடலை சுற்றி இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டு இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் கருதினர். ஜெயக்குமாருக்கு நெருக்கமானவர்களே இதை செய்தனரா அல்லது கூலிப்படையினர் செய்தனரா என விசாரிக்கின்றனர்.ஜெயக்குமார் காணாமல் போவதற்கு முன்பாக எஸ்.பி.,க்கு எழுதியதாக, இரு கடிதங்களை புகாரின் போது அவரது மகன் போலீசில் கொடுத்தார். அது அவரது கையெழுத்து தானா என, சந்தேகம் இருந்தது.இதனிடையே, ஜெயக்குமார், மார்ச் 7ல் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக வள்ளியூர் ஸ்டேட் பாங்க் கிளை மேலாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கையெழுத்து தான் ஜெயக்குமாரின் கையெழுத்து எனவும், தற்போது போலீசுக்கு தரப்பட்டுள்ள கடிதங்கள் அவரது கையெழுத்து இல்லை எனவும் கூறப்படுகிறது.இந்த கடிதம் அவரது லெட்டர் பேடில் போலியாக தயாரிக்கப்பட்டதா எனவும் போலீசார் விசாரிக்கின்றனர். மே 2 இரவில் அவர் மொபைல் போனை கடைசியாக பயன்படுத்தியது திருநெல்வேலி மாவட்டத்தின், குட்டம் கிராமம் என, தெரியவந்துள்ளது. அதன் பின், 'சுவிட்ச் ஆப்' ஆகி உள்ளது.அவர் குட்டத்திற்கு எதற்காக சென்றிருந்தார் என்ற கேள்விகள் எழுகின்றன. குட்டத்தை சேர்ந்த யாருடனாவது அவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.