விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் ரூ.9,445 கோடியிலான திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு
சென்னை:சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை, 9,445 கோடி ரூபாயில் செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம், 13 ரயில் நிலையங்கள் அமைகின்றன.சென்னையில் தற்போது 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கத்தில் புறநகர் பஸ் நிலையம் துவக்கப்பட்டதால், அதுவரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை, 15.5 கி.மீ., வரை மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கப்படும் என, 2018ல் அரசு அறிவித்தது. இந்த தடத்தில், நெடுஞ்சாலையின் மேம்பாலமும் அமைய இருந்ததால், பாலம் வடிவமைப்பு மற்றும் நிலம் ஒதுக்குவதில் பிரச்னை ஏற்பட்டது.இந்நிலையில், மாநில நெடுஞ்சாலை மற்றும் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளுடன், தமிழக அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சில் இறுதி முடிவு செய்யப்பட்டு, சிறு திருத்தங்களுடன், விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் விரிவான புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கையை தலைமை செயலகத்தில், தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறையின் செயலர் கோபாலிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக், நேற்று சமர்ப்பித்தார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ் டன் எலியாசர் ஆகியோர் உடனிருந்தனர். 13 நிலையங்கள்
சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே 15.5 கி.மீ., துாரம் அமையும் இந்த மெட்ரோ திட்டத்தில், விமான நிலையம், பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி நகர், திரு.வி.க., நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கங்கரணை, பெருங்களத்துார், வண்டலுார், அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா, கிளாம்பாக்கம் பஸ் நிலையம் என, 13 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகின்றன.மெட்ரோ ரயில் பாதை, மேம்பால பாதை, மெட்ரோ ரயில் பணிமனை பணிகளை மேற்கொள்ள, 9,445 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.மேலும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு தடையின்றி செல்ல, வெளிவட்ட சாலைவுடன் இணைக்க, தாம்பரம் அருகே சாய்வு பாதைகள் அமைகிறது. இந்த மேம்பாலச் சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்குள் வந்து, செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும்.இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையின் முக்கிய இணைப்பான, விமான நிலையம் -- கிளாம்பாக்கம் பஸ் நிலையம் இடையே, மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தில், சில மாற்றங்களுடன் விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளோம். ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து, 14 - 15 மீட்டர் உயரத்தில் நெடுஞ்சாலைக்கான மேம்பால சாலையும், 18 - 20 மீட்டர் உயரத்தில், மெட்ரோ ரயில் மேம்பால பாதையும் அமைகிறது. தற்போது, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள பாலங்கள் மற்றும் நடைமேம்பாலங்களில், தேவைக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்ய உள்ளோம். தேவைப்பட்டால், ஒரு பகுதியை இடித்துவிட்டு, பின்னர் மீண்டும் கட்டித்தரப்படும்.இந்த விரிவான திட்ட அறிக்கைக்கு அரசின் அனுமதி பெற்று, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒப்புதல் கிடைத்தவுடன், 'டெண்டர்' வெளியிட்டு நிறுவனம் தேர்வு செய்யப்படும். பணியாணை வழங்கிய அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்த திட்டப்பணிகள் முடியும். பயணியரின் வருகைக்கேற்ப, நான்கு அல்லது ஆறு பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் இயக்கப்படும். வெளிவட்ட சாலை வழியாக தாம்பரம் அருகில் உள்ள மேம்பால சாலையையும் இணைத்து, கிளாம்பாக்கம் வரை மேம்பாலம் அமைப்போம். தொடர்ச்சியாக, கிளாம்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை மேம்பால சாலை அமைக்கிறது. இதனால், விமான நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரை மேம்பால சாலை வசதி கிடைக்கும். போக்குவரத்து நெரிசல் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மதிப்பீடு உயர்ந்தது ஏன்?
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம், 2018ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. திட்டத்திற்கான விரிவான அறிக்கை, 2023ல் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது, இந்த திட்டம் செயல்படுத்துவதற்கான மதிப்பீடு, 4,080 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கான பணியை துவக்குவதில் ஏற்பட்ட தாமதம், வடிவமைப்பில் மாற்றங்கள் காரணமாக தற்போது இந்த திட்டத்தின் மதிப்பீடு, 9,445 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இனியும் தாமதம் செய்தால், திட்டத்திற்கான செலவும் மேலும் அதிகரிக்கும் என்பதால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, பயணியர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.