கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசியதாவது:
பிளஸ் 2க்கு பின், அடுத்து என்ன படிக்க வேண்டும் என்பது, பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே குழப்பமாக இருக்கும். இந்த விஷயத்தில், பெற்றோரும், பிள்ளைகளும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். நீட் தேர்வு இன்றி, மருத்துவ படிப்பில் ஏராளமான படிப்புகள் உள்ளன. மருத்துவத் துறையில் ஆர்வம் உள்ளவர்கள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தினால், அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. கால்நடை, மீன்வளம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கும், வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 'நுண்கலை' போன்ற படிப்புகள் சினிமா துறைக்கு உதவும். கேட்டரிங், ஊடகம் மற்றும் விளையாட்டு துறை படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. தங்களுக்கு விருப்பமான சரியான படிப்பை தேர்வு செய்தால், வேலைவாய்ப்பில் நினைத்த இலக்கை எட்ட முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.
என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல, இந்த நிகழ்ச்சி சிறந்த வாய்ப்பாகும்.
- பி.ஏ.நந்தினி, அண்ணா நகர். எந்த வேலையில் ஈடுபாடு உள்ளதோ, அந்த படிப்பை தேர்வு செய்ய வேண்டும். படிப்புக்கேற்ற வேலையை செய்வதை விட, பிடித்த வேலையை செய்ய வேண்டும் என்பதை வழிகாட்டி நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன்.- விஸ்வா, கோவிலம்பாக்கம்.நீட் தேர்வு இல்லாமல் சேரும் மருத்துவ படிப்புகள் குறித்தும், கல்லுாரிகள் குறித்தும் தெரிந்து கொண்டேன். ஒரே இடத்தில் அனைத்து ஆலோசனைகளும் கிடைத்தன. தினமலருக்கு நன்றி.- கே.ரோகிணி, திருவொற்றியூர். இன்ஜினியரிங் எதிர்காலம் குறித்தும், ஐ.டி., துறை வேலைவாய்ப்புகள் குறித்தும் வழிகாட்டி நிகழ்ச்சியில் நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன்.- கே.கவுதம், வியாசர்பாடி.அனைத்து படிப்புகளையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வசதியாக, கல்வி நிறுவன அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கல்லுாரி அட்மிஷன் சந்தேகங்களுக்கு ஓரளவு விடை கிடைத்தது.- டி.கிரண், கொடுங்கையூர்.
'அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி ஏ.ஐ., தொழில்நுட்பம்'
ஏ.ஐ., தொழில்நுட்பம் குறித்து, அம்ரிதா நிகர்நிலை பல்கலையின் பேராசிரியர் வெங்கட சுப்ரமணியன் பேசியதாவது: 'ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்' எனப்படும் செயற்கை நுண்ணறிவு, மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது. விவசாயம், மருத்துவம், கல்வி, ஆட்டோமொபைல், விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.பள்ளி கல்வி துவங்கி, பல்கலைகள் வரை, பல்வேறு கல்வி சார்ந்த அமைப்புகளில், ஏ.ஐ., சாட்பாட் பயன்படுத்தப்படுகிறது. வேளாண் துறையில், விளைச்சலை அதிகமாக்க வழிகாட்டுவதோடு, பூச்சிகளை கட்டுப்படுத்தவும், தண்ணீர் உள்ளிட்ட வளங்களை பயன்படுத்தவும் ஏ.ஐ., வழியே தீர்வு கிடைக்கிறது.விண்வெளி துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஆட்டோ மொபைலில், டிரைவர் இல்லாத கார்கள், டூ - வீலர்கள், பேருந்துகள், டிரக்குகள் வரை, வாகன துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுனர் சீட் பெல்ட் அணியாதபோது, காரின் கதவு மூடப்படாத போது, அறிகுறியாக அலாரம் ஒலிக்கும்.வாகனங்களில் உதிரிபாகங்களின் செயலிழப்பு குறித்து, ஓட்டுனருக்கு அறிவித்து எச்சரிக்கும். இப்படி, ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் பயன்பாடு அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி செல்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.
பிரகாசமான எதிர்காலம்'
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா எஜுகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ் நிறுவன பேராசிரியர் முருகராஜன் பேசியதாவது:எல்லா துறைகளிலும், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்துள்ளது. இயந்திரங்கள் இன்றி எந்த தொழில் நிறுவனங்களும் செயல்படுவது இல்லை. அதனால், ரோபாட்டிக்ஸ் சார்ந்த படிப்புகளுக்கு அதிக மவுசு உள்ளது.தொழிற்சாலைகள் ஸ்மார்ட் தொழில்நுட்பத்துக்கு மாறி வருகின்றன. ரோபோக்களின் செயல்திறன் அதிகரித்தால், மனிதர்களுக்கு வேலை இருக்காது என்ற கூற்று அனைவரிடமும் உள்ளது. மனிதர்கள் தான் அதை இயக்கப் போகின்றனர். அதனால், வேலைவாய்ப்பில் பிரச்னை இருக்காது.வாகன உற்பத்தி, நெடுஞ்சாலை பணிகள், கட்டுமானம், வேளாண்மை, மருத்துவம் என, எல்லா துறைகளிலும், ரோபோக்கள் அல்லது தானியங்கி கருவிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.எதிர்காலத்தில், ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம் இன்னும் வளரும் என்பதால், அவை சார்ந்த படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.