உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திசை திருப்பவே ஜெ., குறித்து பேசினேன் பா.ஜ.,வினரிடம் அண்ணாமலை விளக்கம்

திசை திருப்பவே ஜெ., குறித்து பேசினேன் பா.ஜ.,வினரிடம் அண்ணாமலை விளக்கம்

தமிழக பா.ஜ., சார்பில், லோக்சபா தேர்தலுக்கு பின், சென்னையில் நேற்று முன்தினம், கட்சி மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாக கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் சிலர் கூறியதாவது: லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அதைப் பற்றி நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். நம் அடுத்த இலக்கு, 2026 தமிழக சட்டசபைத் தேர்தல்தான். அதை நோக்கித்தான் நம் பாய்ச்சல் இருக்க வேண்டும். அர்ஜுனன் எப்படி இலக்கில் கவனமாக இருப்பானோ, அதைப் போல கட்சியினர் ஒவ்வொருவரும், இலக்கில்தான் கூர்மையான கவனத்துடன் இருக்க வேண்டும். அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழகமும், பா.ஜ.,வும் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்துதான் தொடர்ந்து சிந்திக்க வேண்டும். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை,'ஹிந்துத்துவா தலைவர்' என குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. குறிப்பாக, அ.தி.மு.க.,வினர் என்னை எதிர்த்து கொந்தளிக்கின்றனர். கொந்தளிப்பு ஏற்படும் என்பதை நன்கு தெரிந்துதான், அப்படி பேசினேன். அதற்கு ஒரு பின்னணி உண்டு. ஒடிசாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியாற்றி, தற்போது அரசியல்வாதியாக மாறியிருக்கும் தமிழர் வி.கே.பாண்டியன் குறித்து, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பேசியது, தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒரு தமிழர் குறித்து இப்படி விமர்சிக்கலாமா என, இங்கு இருப்பவர்களை துாண்டுவிடும் விதமாக, முதல்வர் ஸ்டாலின் முதல், தி.மு.க., கூட்டணியில் உள்ள அனைவரும் விமர்சனம் செய்தனர். இந்த விஷயத்தில் பா.ஜ., தரப்பில் சரியான விளக்கம் எதுவும் தராத நிலையில், இந்தப் பிரச்னை குறித்தே பேசி, விவாதித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தான், ஜெயலலிதா மிகச் சிறந்த ஹிந்து தலைவர் என குறிப்பிட்டுப் பேசினேன். தமிழகத்தின் ஒட்டு மொத்த பார்வையும், அந்த விஷயத்தின் மீது திரும்பியது. அ.தி.மு.க., தலைவர்கள் பலரும் என் கருத்தை விமர்சித்து பேசினர். மொத்த அரசியல் களமும், இந்த விஷயத்தை நோக்கி பார்வையை திருப்பியது. இதனால், வி.கே.பாண்டியன் குறித்த சர்ச்சை அப்படியே அடங்கியது.ஆக, எதை நினைத்து நான் ஜெயலலிதா குறித்து பேசினேனோ, அதே திசையில் விமர்சனங்கள் கிளம்பின. மொத்தத்தில், பாண்டியன் மீதான விமர்சன சர்ச்சை திசை திருப்பி விடப்பட்டது. இப்படித்தான், ஒவ்வொரு விஷயத்தையும் பா.ஜ.,வினர் அணுக கற்றுக் கொள்ள வேண்டும். ஜெயலலிதா ஒரு தீவிரமான ஹிந்துத்துவா தலைவர். இதில், அ.தி.மு.க.,வினர் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால், 1995ல் ஹிந்துத்துவா குறித்து, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை படிக்க வேண்டும். ஹிந்துத்துவா என்பது வாழ்க்கை முறை. அது மதம் கிடையாது. அனைவரையும் அரவணைப்பதுதான் ஹிந்துத்துவா. இவ்வாறு அண்ணாமலை பேசியதாக அவர்கள் கூறினர்.

அண்ணாமலையே மன்னிப்பு கேள்: போஸ்டரால் சர்ச்சை :

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகச் சிறந்த ஹிந்துத்துவா தலைவர் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு, அ.தி.மு.க., தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அ.தி.மு.க.,வினர் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி வருவது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சீனிவாசன், உதயகுமார் உட்பட பலரும், அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தனர். கூடவே சிவகங்கை, திருநெல்வேலி உட்பட பல மாவட்டங்களில், அண்ணாமலையை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். 'அண்ணாமலையை கண்டிக்கிறோம். ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, அனைத்து மதங்களையும் தன் வாழ்நாள் முழுதும் மதித்து, வாழ்ந்து மறைந்த ஜெயலலிதா குறித்து, அவதுாறு பரப்பும் அண்ணாமலையை கண்டிக்கிறோம். அரைவேக்காடு அண்ணாமலையே மன்னிப்பு கேள்' என, போஸ்டரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.மற்றொரு போஸ்டரில்,'1.50 கோடி அ.தி.மு.க., தொண்டர்களின் உணர்ச்சியை துாண்டாதே. ஜெயலலிதாவை பற்றி பேச உனக்கு தகுதி உண்டா; அண்ணாமலையே நாவை அடக்கு' என, குறிப்பிடப்பட்டுள்ளனர். ***- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை