அன்னுார் : 'அன்னுாரில், பா.ஜ., முன்னாள் நிர்வாகி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது 18.50 லட்சம் மட்டுமே; 1.50 கோடி ரூபாய் இல்லை' என, கொள்ளையன் அளித்த வாக்குமூலத்தால், ''பொய் புகார் அளித்த பா.ஜ., முன்னாள் நிர்வாகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கோவை ரூரல் எஸ்.பி., தெரிவித்தார்.அன்னுார் அருகே சொக்கம்பாளையம் திருமுருகன் நகர் தோட்டத்தில் வசிப்பவர் விஜயகுமார், 45, இவர் பா.ஜ., ஓட்டுனர் அணியின் அமைப்பு சாரா ஒன்றிய தலைவராக இருந்தார்; தற்போது அந்த பொறுப்பில் இல்லை.இவரது வீட்டின் கதவை, கடந்த 18ம் தேதி உடைத்து, பீரோவில் வைத்திருந்த 1.50 கோடி ரூபாய், 9 சவரன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக, விஜயகுமார், அன்னுார் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினார்.இந்நிலையில் விஜயகுமார் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்தவரை சம்பவம் நடந்த, 24 மணி நேரத்திற்குள் போலீசார் சோமனுார் அருகே நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணைக்கு பின், 'விஜயகுமார் வீட்டில் கொள்ளையடித்தது 18.50 லட்சம் ரூபாய் மட்டுமே; 1.50 கோடி ரூபாய் இல்லை' என, அந்த நபர் வாக்குமூலம் அளித்தார்.இதுகுறித்து, கோவை ரூரல் எஸ்.பி., பத்ரி நாராயணன் நேற்று கூறியதாவது:'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்ததில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன், 33, கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை, 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 18.50 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டன.அன்பரசனிடம் மேற்கொண்ட விசாரணையில், விஜயகுமார் வீட்டில் இருந்து, 18.50 லட்சம் ரூபாய் தான் எடுத்ததாக கூறினார். இதுகுறித்து புகார் அளித்த விஜயகுமாரிடம் கேட்டபோது, 'வீட்டில் 1.50 கோடி ரூபாய் இல்லை; 18.50 லட்சம் ரூபாய் தான் இருந்தது' என்பதை ஒப்புக்கொண்டார்.மேலும், போலீசாரிடம் அதிக பணம் கொள்ளை போனது என சொன்னால் தான், துரிதமாக வேலை செய்வர் என்பதால் அவ்வாறு சொன்னதாக கூறினார்.இதனால் பொய் புகார் கூறிய அவர் மீது, இந்திய தண்டனை சட்டம் 182, 203 பிரிவுகளின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம்.கைது செய்யப்பட்டுள்ள அன்பரசன் மீது பல்வேறு மாவட்டங்களில், 18க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.