திருமங்கலம் : திருமங்கலம் கப்பலுார் டோல்கேட்டில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.,வினர் மற்றும் திருமங்கலம் டோல்கேட் எதிர்ப்புக் குழுவினர் மறியலில் ஈடுபட்டனர். நாள் முழுக்க நடந்த போராட்டத்தால், நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து தடைபட்டது.மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலுாரில் விதிமுறைகளை மீறி, டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 12 வருடங்களாக, அவ்வப்போது போராட்டம் நடக்கும். அப்போதெல்லாம் கட்டணம் வசூல் நிறுத்தி வைக்கப்படும். சிறிது காலத்திற்கு பின் மீண்டும் வசூலிப்பது தொடரும். இந்நிலையில், திருமங்கலம் பகுதியில் உள்ள வாகனங்கள் டோல்கேட்டை பயன்படுத்தியதற்கு கட்டணமாக ஒரு லட்சம் ரூபாய் முதல் 22 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தக்கோரி டோல்கேட் நிர்வாகம் சார்பில், சமீபத்தில் வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 10 நாட்களுக்கு முன் வாகன ஓட்டிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின், உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீத கட்டணமே வசூலிக்கப்படும் என டோல்கேட் நிர்வாகம் வாய்மொழியாக வாகன ஓட்டிகளிடம் தெரிவித்தது. எனவே, நேற்று திருமங்கலம் பகுதி வாகன ஓட்டிகள் டோல்கேட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து, முன்னாள் அமைச்சர் உதயகுமாரிடம் ஆதரவு கேட்டனர்.இதையடுத்து உதயகுமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் டோல்கேட்டில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதில் டோல்கேட் எதிர்ப்பு குழுவினரும் வாகனங்களோடு போராட்டத்தில் பங்கேற்றனர். டோல்கேட் பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்தி தடுப்புகளை ஏற்படுத்தினர். அதுமட்டுமல்லாமல், திருமங்கலத்தின் முக்கிய சாலைகள் அனைத்திலும் மறியல் செய்தனர். இதனால் திருமங்கலம் பகுதியே கடும் நெரிசலுக்குள்ளானது. இதையடுத்து, போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்தனர். இதனால் நெல்லை, திண்டுக்கல் பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் 20 கி.மீ.,க்கும் கூடுதலாக சுற்றிச் சென்றன.போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் உதயகுமாரை, ஆதரவாளர்கள் சிலருடன் கைது செய்து போலீசார் வேனில் ஏற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டோல்கேட் எதிர்ப்புக் குழுவினர் ரோட்டில் அமர்ந்து, வேனை மறித்தனர். போராட்டம் தீவிரமானதால் போலீசார் உதயகுமாரை வேனில் இருந்து இறக்கினர். அவரிடம் ஆர்.டி.ஓ., சாந்தி, ஏ.டி.எஸ்.பி., கணேசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் கீர்த்தி பர்வதராஜ் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். திருமங்கலம் பகுதி வாகனங்கள் தற்போதுள்ளது போல கட்டணம் செலுத்தாமல் செல்வதற்கான உத்தரவை எழுத்துப்பூர்வமாக தரவேண்டும் என உதயகுமார் தரப்பினர் வலியுறுத்தினர். இதற்கு பதில் அளிக்காத திட்ட இயக்குனர் காரில் ஏறிச் சென்று விட்டார். போராட்டம் மீண்டும் தொடர்ந்த நிலையில் அதிகாரிகள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் ஏற்படவில்லை. மாலை 6:30 மணிக்கு, 'திங்கட் கிழமை கலெக்டர் சங்கீதா தலைமையில் அமைதி கூட்டம் நடத்தி, அதில் முடிவெடுத்து எழுத்துப் பூர்வமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன்பிறகே, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கலைந்து சென்றனர். காலை 9:00 முதல், மாலை 6:30 மணி வரை நான்கு வழிச்சாலையில் நடந்த போராட்டத்தால், அந்தப் பகுதி வழியே பயணித்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.