ரயில்வே திட்டங்களுக்கு நிலம் தமிழக அரசால் தாமதம் இல்லை
சென்னை:ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வருவதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான நிலங்களை, நிலமெடுப்பு செய்வதில், மாநில அரசு காலதாமதம் செய்து வருவதாக, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை தெரிவித்து உள்ளார்.தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு மொத்தமாக, 2,197.02 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த, ஏற்கனவே அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முக்கியமான 17 ரயில்வே திட்டங்களுக்கு தேவையான, 1,253.11 ஹெக்டேர் நிலத்தில், 1,144.84 ஹெக்டேர் நிலம் எடுக்கப்பட்டு, ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை -- திண்டிவனம் புதிய அகல ரயில் பாதை திட்டத்துக்கு, 229.23 ஹெக்டேர் நிலம் எடுக்க செய்ய அனுமதி வழங்கப்பட்டும், ரயில்வே துறையால் நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் முடங்கியுள்ளன.ஈரோடு மாவட்டத்தில், கதிசக்தி பல்முனை மாதிரி சரக்கு முனையம் அமைக்க, 12.38 ஹெக்டேர் நிலத்திற்கு நிர்வாக அனுமதி, 2022ல் வழங்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் ரயில்வே துறையால் தற்போது கைவிடப்பட்டுள்ளது. ரயில் பாதை அமையஉள்ள அரசு புறம்போக்கு நிலங்களை பொறுத்தவரையில், எந்த தடைகளும் இன்றி அவ்வப்போது அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு, அரசு நிலங்கள் ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை வழங்குவதில், தமிழக வருவாய் துறையால் தாமதம் எதுவும் ஏற்படவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.