கிருஷ்ணகிரி : 'வங்கதேச கலவரத்தால், துப்பாக்கி சத்தம், தொலைத்தொடர்பு வசதி இல்லாமல், மூன்று நாட்கள் அவதிப்பட்டோம்' என, அந்நாட்டிலிருந்து கிருஷ்ணகிரி திரும்பிய மாணவியர் கண்ணீருடன் கூறினர்.வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கலவரம் வெடித்ததில், 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பதற்றத்தை தணிக்க, வங்கதேச ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வங்கதேசத்தில் படிக்கச் சென்று தவித்த இந்திய மாணவ, மாணவியரை, நம் நாட்டின் வெளியுறவுத்துறை மீட்டு வருகிறது. வங்கதேசத்தில், மருத்துவம் படிக்கச் சென்று தவித்த தமிழகத்தை சேர்ந்த 49 மாணவ, மாணவியர் நேற்று முன்தினம் பத்திரமாக திரும்பினர்.இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, 12 பேர் அடங்குவர். அவர்களில், ப்ரீதா, ஸ்ரீநிதி, தக் ஷன்யா ஆகியோர் நேற்று கூறியதாவது:வங்கதேசத்தின் சிலேட் பகுதியிலுள்ள சிலேட் மகளிர் மருத்துவக் கல்லுாரியில் படிக்கிறோம். சிலர் பயிற்சி மருத்துவராகவும் உள்ளனர். எங்கள் கல்லுாரியில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.வங்கதேசத்தில், கடந்த ஜூலை 17ல் மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி பரவியது. இதன் விபரங்கள், கலவரங்கள் குறித்து முழுமையாக தெரிவதற்குள் இணையதளம் முடக்கப்பட்டது. அனைத்து தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. ஹாஸ்டலில் உணவும் வழங்காத நிலையில், நாங்களே உணவு தயாரித்தோம். 'உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்' என்று மட்டுமே அறிவுறுத்தப்பட்டது.கடந்த இரு நாட்களுக்கு முன் கலவரம் தீவிரமானதை, துப்பாக்கி சத்தம் மற்றும் கலவர வீடியோக்களை பார்த்து அறிந்தோம். எங்கள் விடுதியிலிருந்த மாணவி தக் ஷன்யாவின் மொபைலில் மட்டும் அதிர்ஷ்டவசமாக டவர் கிடைத்தது. அந்த மொபைல் வாயிலாக, 60 மாணவியர் தங்கள் பெற்றோரிடம் பேசி தகவல் தெரிவித்தனர்.எவ்வளவு விரைவாக இங்கிருந்து செல்ல முடியுமோ செல்லுங்கள், நிலைமை மோசமாக உள்ளது என்று விடுதி மற்றும் கல்லுாரி நிர்வாகிகள் கூறியதால், மேலும் பதற்றமடைந்தோம். 'டிவி'யில் பார்த்த ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொண்டு, இந்திய துாதரக அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள், பெயர், விபரங்களை மட்டும் கேட்டனர். அதன்பின், தமிழக அரசு உதவியோடு, எங்களது பாஸ்போர்ட் விபரங்கள் முதல், விமான டிக்கெட் வரை அவர்களே ஏற்பாடு செய்தனர்.கடந்த 20ம் தேதி மதியம் 3:00 மணிக்கு சிலேட் பகுதியிலிருந்து கிளம்பிய நாங்கள், சிலாங், தமாபில், தவுகி எல்லை வழியாக கவுஹாத்திக்கு, ராணுவ பாதுகாப்பில் அழைத்து வரப்பட்டோம். நேற்று முன்தினம் கவுஹாத்தியிலிருந்து விமானத்தில் சென்னை வந்தோம். எங்களை தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.மூன்று நாட்கள் துப்பாக்கி சத்தம், கலவர பீதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக அழைத்து வர உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. வங்கதேசத்தின் டாக்கா, மைமென்சிங் பகுதி கல்லுாரிகளில், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு கலவரம் தீவிரமடைந்துள்ளதால், அவர்களை மீட்கவும், அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.