அக் ஷய திருதிக்கு 25,000 கிலோ தங்கம் விற்பனை; விலை உயர்வால் எதிர்பார்த்த 20% அதிகரிக்கவில்லை
சென்னை: தமிழகத்தில் அக் ஷய திருதியை முன்னிட்டு, நேற்று தங்கம் விற்பனை, 20 சதவீதம் அதிகரிக்கும் என்று நகைக்கடை வியாபாரிகள் எதிர்பார்த்த நிலையில், கடந்த ஆண்டின் விற்பனை அளவான, 25,000 கிலோ என்றளவில் தான், தங்கம் விற்பனையாகி உள்ளது. அக் ஷய திருதியைக்கு தங்கம் வாங்கினால், தங்களிடம் உள்ள செல்வம் மேலும் பெருகும் என்ற நம்பிக்கை, மக்களிடம் உள்ளது. இதனால், வசதியானவர்கள் மட்டுமின்றி, ஏழை மக்களும் தங்கம் வாங்குகின்றனர். அக் ஷய திருதியை அன்று, தங்கம் விற்பனை அமோகமாக இருக்கும். கடந்த ஆண்டு அக் ஷய திருதியைக்கு, 25,000 கிலோ தங்கம் விற்பனையானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s8oswm14&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் உள்ளிட்ட காரணங்களால், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். அதனால், எப்போதும் இல்லாத வகையில், கடந்த நான்கு மாதங்களில், தங்கம் விலை சவரனுக்கு, 15,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.இம்மாத துவக்கத்தில் தங்கம் விலை திடீரென குறைவது, மீண்டும் உயர்வது என, ஏற்ற, இறக்கமாக இருந்தது. இதனால், இரு வாரங்களுக்கு முன்னதாகவே, அக் ஷய திருதியைக்கு நகைகளை முன்பதிவு செய்ய, நகைக்கடைகள் புதிய சலுகைகளை அறிமுகம் செய்தன. அதன்படி, 10 சதவீத தொகையை செலுத்தி, நகைகளை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள், அக் ஷய திருதியைக்கு தங்கம் வாங்க வரும் போது, முன்பதிவு செய்த நாளில் இருந்து, அக் ஷய திருதியை வரை, எந்த நாளில் விலை குறைவாக உள்ளதோ, அந்த விலைக்கு நகைகளை வாங்கலாம். குறிப்பிட்ட தொகைக்கு மேல் தங்கம் வாங்கினால், தங்க நாணயம் இலவசம், சேதாரத்தில் தள்ளுபடி, வைரம் வாங்கினால் தங்க நாணயம் இலவசம் என, பல சலுகைகளை அறிவித்தன. அக் ஷய திருதியை தினமான நேற்று, சென்னை உட்பட மாநிலம் முழுதும் நகைக்கடைகள் காலை, 6:00 மணிக்கு திறக்கப்பட்டன. மக்கள் நகைக் கடைகளுக்கு சென்று, நகைகளை வாங்கினர். எனினும், பல கடைகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது. கடந்த ஆண்டில் விற்பனையான அளவிற்கே, நேற்றும் தங்கம் விற்பனை இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, தங்க நகைக் கடை உரிமையாளர்கள் கூறியதாவது:
தமிழகத்தில், சிறியது, பெரியது என, மொத்தம், 35,000 நகைக்கடைகள் உள்ளன. அவற்றில் தினமும் சராசரியாக, 10,000 முதல் 15,000 கிலோ தங்கம் விற்பனையாகிறது. அக் ஷய திருதியை, தீபாவளி போன்ற சுப தினங்களில், தங்கம் விற்பனை நன்றாக இருக்கும். கடந்த, 2023 அக் ஷய திருதியைக்கு, 20,000 கிலோ, 2024ல், 25,000 கிலோ தங்கம் விற்பனையானது. அதை விட, 20 சதவீதம் இந்த அக் ஷய திருதியைக்கு அதிகரிக்கும் என்று, எதிர்பார்க்கப்பட்டது. தங்கம் விலை உயர்வு, விலை குறையும் போது வாங்கலாம் என்ற குழப்பத்தால், பல வாடிக்கையாளர்கள், அக் ஷய திருதியைக்கு தங்கம் வாங்காததால், எதிர்பார்த்த அளவுக்கு, விற்பனை அதிகரிக்கவில்லை. கடந்த ஆண்டில் விற்பனையான, 25,000 கிலோ தான் இந்தாண்டும் இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசுக்கு வருவாய் ரூ.735 கோடி
தற்போது, ஒரு கிலோ தங்கம் விலை, 98 லட்சம் ரூபாயாக உள்ளது. நேற்று, 25,000 கிலோ தங்கம் விற்பனையானதால், 24,500 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளது. தங்கம் மீது, 3 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது. எனவே, அக் ஷய திருதியை தங்கம் விற்பனையால், மத்திய, மாநில அரசுகளுக்கு, 735 கோடி ரூபாய் அளவுக்கு வரி வருவாய் கிடைத்துள்ளது. *
தங்கம் விலை அதிகமானதால் விற்பனை மந்தம்
மதுரை ஜூவல்லர்ஸ் அன்ட் புல்லியன் மெர்சன்ட் அசோசியேஷன் தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:விலை உயர்வே தங்கத்தின் விற்பனை சரிய முக்கிய காரணம். அட்சய திருதியைக்கு (ஏப்.,30) ஒரு வாரம் முன்பாக திடீரென விலை குறைந்ததால் மீண்டும் விலை குறையுமோ என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்து வைகாசி முகூர்த்தம் உள்ளதால், தேவைக்கு வாங்குவோர் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை. ஆனால் இதை முதலீடாக வாங்கி வைக்க நினைப்பவர்கள் பின்வாங்கியதால் விற்பனை சரிந்தது. தங்கம் விலையின் திடீர் ஏற்ற இறக்கத்தால் அட்சய திருதியைக்கு வாங்காவிட்டாலும் பரவாயில்லை, இன்னும் 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்தில் விலை குறையும் போது வாங்கலாம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டனர். திடீரென விலை குறைவது போலிருந்தாலும் தொடர்ந்து குறையப்போவது இல்லை. அடுத்தடுத்து இன்னும் விலை அதிகரிக்கத் தான் செய்யும். தங்கத்தின் விலையை நிர்ணயிப்பது உலகப் பொருளாதாரம் தான். இது ஒழுங்கில்லாமல் இருப்பதால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் பதட்டத்தில் உள்ளனர். அமெரிக்க வங்கியில் வட்டியைக் குறைத்தால் உடனடியாக மக்கள் தங்கத்தை வாங்கி முதலீடு செய்வர். டெபாசிட் அதிகரித்தால் விற்பர். தங்கம் உற்பத்தி குறைந்ததோடு உற்பத்திக்கான செலவும் அதிகரிப்பதால் சமீபகாலமாக விலை அதிகரித்து கொண்டே செல்கிறது.இந்தாண்டு அட்சய திருதியைக்கான (ஏப்.,30) முன்பதிவும் நேரடி விற்பனையும் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது பாதியாக குறைந்து விட்டது. எங்கள் சங்கத்தில் 1800 பேர் உறுப்பினர்களாக உள்ளோம். கடைகளின் தன்மைக்கேற்ப சராசரியாக எல்லா கடைகளிலும் விற்பனை மந்தமானது உண்மை என்றார்.