உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  2025ல் 25,278 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு; வரும் பிப்ரவரி வரை பரவ வாய்ப்பு

 2025ல் 25,278 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு; வரும் பிப்ரவரி வரை பரவ வாய்ப்பு

சென்னை; 'தமிழகத்தில், 2025ம் ஆண்டில், 25,278 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 10 பேர் இறந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் வரை, டெங்கு பாதிப்பு இருக்கும்' என, பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மழைக் காலங்களில், டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ் - எஜிப்டை' வகை கொசுக்கள், அதிக அளவில் உற்பத்தியாகி, நோய்களை பரப்பி வருகின்றன. இதன் காரணமாக, ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை, டெங்கு பாதிப்பு தீவிரமாக இருந்தது. அம்மாதங்களில் சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், தினசரி, 500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர்.

குறைந்தது

மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து எடுத்த தொடர் நடவடிக்கை காரணமாக, டெங்கு பாதிப்பு தற்போது குறைந்து, தினசரி பாதிப்பாக, 100க்கு கீழ் பதிவாகி வருகிறது. அதேநேரத்தில், கடந்த ஆண்டு, 46,927 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பா திப்பு எண்ணிக்கை, பாதியாக குறைந்து, 25,278 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு, 46,927 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில், 13 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு மழைக் காலங்களில், டெங்குவின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, கிராமங்களை விட, நகர்ப் பகுதிகளில் பாதிப்பு அதிகம் இருந்தது. அதைத்தொடர்ந்து, அனைத்து வித காய்ச்சல் பாதிப்புகளையும், அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, டெங்கு உறுதி செய்யப்படும் பகுதிகளில், உடனடி மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பாதிப்பு மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இதன் பயனாக, டெங்கு பாதிப்பு குறைந்தது. இந்த ஆண்டில், 25,278 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகினர். அவர்களில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

அலட்சியம் கூடாது

அதிகபட்சமாக, சென்னையில், 6,284; திருவள்ளூரில் 2,094; கோவையில், 1,882; கடலுாரில், 1,525 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். மற்ற மாவட்டங்களில், 1,000க்கும் கீழ் தான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக கரூரில், 91 பேர், நீலகிரியில் 103 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு, 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, 100க்கும் கீழ் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட, 113 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். டெங்கு பரவலின் தீவிரம் குறைந்திருந்தாலும், வரும் ஜன., பிப்., மாதங்களிலும் பாதிப்பு இருக்கும். அதன்பின்னரே குறைய துவங்கும். எனவே, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், அலட்சியம் காட்டாமல், டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி