நடிகர் திலீப் தரிசன விவகாரத்தில் நீதிமன்ற அறிவுரைப்படி நடவடிக்கை
சபரிமலை: நடிகர் திலீப்புக்கு வி.ஐ.பி. தரிசனம் வழங்கப்பட்ட விவகாரத்தில் கேரள உயர் நீதிமன்ற தீர்மானத்தின் படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி. எஸ். பிரசாந்த் கூறியுள்ளார்.டிச.5ல் நடிகர் திலீப் சபரிமலை தரிசனத்துக்கு வந்த போது முன் வரிசையில் வந்த பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இவருக்கு சிறப்பு தரிசன வசதி செய்து கொடுக்கப்பட்டது. இதை கேரள உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்தது. இது தொடர்பாக இரண்டு தேவசம் அதிகாரிகள் உட்பட நான்கு ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.சபரிமலை செயல் அலுவலர் இது தொடர்பான அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.இந்நிலையில் தேவசம் போர்டு தலைவர் பி. எஸ். பிரசாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:சிறிது நேரமாவது பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என்று நீதிமன்றம் கூறியுள்ளது சரியானதுதான். மண்டல மகர விளக்கு கால ஏற்பாட்டில் இதை ஒரு தோல்வியாக தான் கருதுகிறோம். எனினும் இந்த விஷயத்தில் நீதிமன்றம் கூறும் முடிவுக்கு ஏற்ப நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.