நடிகர் ரவிமோகன் ரூ.5.90 கோடி உத்தரவாதம் தாக்கல் செய்ய உத்தரவு
சென்னை:'படத்தில் நடிப்பதற்காக வாங்கிய ஆறு கோடி ரூபாய் முன் பணத்தை திரும்ப அளிக்கக் கோரி, 'பாபி டச் கோல்ட் யுனிவர்சல்' நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில், 5.90 கோடி ரூபாய்க்கான, உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும்' என, நடிகர் ரவி மோகனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையை சேர்ந்த, 'பாபி டச் கோல்ட் யுனிவர்சல்' பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன், கடந்த செப்டம்பரில், இரண்டு படங்களில் நடிக்க, நடிகர் ரவிமோகன் ஒப் பந்தம் செய்து கொண்டார். படத்துக்கு ஊதியமாக பேசப்பட்ட, 15 கோடி ரூபாயில், ஆறு கோடி ரூபாயை, முன் பணமாக ரவிமோகன் பெற்றுக் கொண்டார். ஆனால், ஒப்பந்தப் படி, தங்கள் நிறுவனத்தின் படத்தில் நடிக்காமல், மற்ற படங்களில் நடித்ததால், முன் பணமாக பெற்ற ஆறு கோடி ரூபாயை, நடிகர் ரவிமோகன் திருப்பி அளிக்க உத்தரவிடக் கோரி, 'பாபி டச் கோல்ட் யுனிவர்சல்' நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேநேரம், 'ஒப்பந்தப்படி 80 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியும், தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பை துவக்காததால், தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு, தயாரிப்பு நிறுவனம் ஒன்பது கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என, நடிகர் ரவி மோகன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள், நீதிபதி அப்துல் குத்துாஸ் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதி, இரு தரப்புக்கும் இடையிலான பிரச்னையை தீர்த்து கொள்ள, ஆர்பிட்டர் எனப்படும் நடுவரை நியமிப்பதாகக் கூறி, ஒன்பது கோடி ரூபாய் இழப்பீடு கோரியும், வேறு படங்களை வெளியிட, தயாரிப்பு நிறுவனத்துக்கு தடை விதிக்க கோரியும், ரவிமோகன் தாக்கல் செய்ய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், 5.90 கோடி ரூபாய்க்கான, சொத்து உத்தரவாதத்தை தாக்கல் செய்யும்படியும் நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டார்.