| ADDED : நவ 27, 2025 09:07 AM
அவனியாபுரம்: 'அ.தி.மு.க., வை பலவீனப்படுத்துவதை செயல் திட்டமாக பா.ஜ., செயல்படுத்தி வருகிறது. அது அ.தி.மு.க., விற்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல. அ.தி.மு.க., அதைப்பற்றி சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும், என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: தேர்தல் கமிஷனை பயன்படுத்தி பா.ஜ., அரசு ஒவ்வொரு குடிமகனின் குடியுரிமையையும் சோதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. செங்கோட்டையன் அ.தி.மு.க., வின் மூத்த தலைவர். அவரை அ.தி.மு.க., விலிருந்து வெளியேற்றியது பழனிசாமிக்கும், அ.தி.மு.க., விற்கும் பின்னடைவாக தான் இருக்கும். அ.தி.மு.க., வை பலவீனப்படுத்துவதை செயல் திட்டமாக பா.ஜ., செயல்படுத்தி வருகிறது. அது அ.தி.மு.க., விற்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல. அ.தி.மு.க., அதைப்பற்றி சிந்தித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். கவர்னர் திரும்பத் திரும்ப தமிழகத்திற்கு எதிராகவும், திராவிட அரசியலுக்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். முரண்பாடுகளையும் தமிழக மக்களுக்கு இடையிலுள்ள பாகுபாடுகளையும் வைத்து அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அவரது கருத்தை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் ஆட்சியாளர்கள் அவரை வைத்து தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவது கவலை அளிக்கிறது என்றார்.