விழுந்து நொறுங்கியது விமானப்படையின் பயிற்சி விமானம் திருப்போரூர் அருகே நடந்த சம்பவத்தில் உயிர் தப்பினார் விமானி
சென்னை: தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட பயிற்சி விமானம், திருப்போரூரில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த விமானி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். சென்னை தாம்பரத்தில், இந்திய விமான படையின் விமானப்படை தளம் உள்ளது. இங்கு விமானப்படை வீரர்களுக்கு, விமானம் இயக்குதல் உட்பட, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இங்குள்ள வீரர்கள், தொடர் விமான பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். நேற்று பகல், 1:30 மணிக்கு, இந்த தளத்திலிருந்து, 'பிளேட்டஸ் பி.சி.,7' என்ற பயிற்சி விமானம் புறப்பட்டது. இயந்திர கோளாறு இந்த விமானத்தை விமானி சுபம், 30, என்பவர் இயக்கினார். விமானம் சென்னை வான்வெளியில் தாம்பரத்தை தாண்டி திருப்போரூர் பகுதியில், பகல் 2:00 மணிக்கு பறந்தது. அப்போது, விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். உடனடியாக, விமானத்தை பாதுகாப்பாக, அப்பகுதியில் தரையிறக்க முயன்றார். ஆனால், எதிர்பார்த்தபடி விமானத்தை தரையிறக்க முடியவில்லை. கட்டுப்பாட்டை இழந்த விமானம், திருப்போரூர் - நெம்மேலி சாலையில் உள்ள, தனியார் உப்பு பேக்கிங் செய்யும் தொழிற்சாலையின் பின்பகுதியில் சேற்றில் விழுந்தது. இதில், விமானத்தின் சில பாகங்கள் சிதறின. முன்னதாக, விமானம் கீழே விழப்போவதை அறிந்த விமானி, பாராசூட்டில் குதித்து தப்பினார். பயிற்சி விமானம் விழுந்த இடத்தில், தொழிற்சாலையின் ஒரு பகுதி சேதமானது. சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தோர் விரைந்து வந்தனர். விமானம் சிதறி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து, திருப்போரூர் போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பாராசூட்டில் குதித்த விமானியை, தண்டலம் கிராம மக்கள், ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சித்தனர். அவர் செல்ல மறுத்து விட்டார். முதலுதவி இந்நிலையில், தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து, மருத்துவ குழுவினருடன் விமானப்படை அதிகாரிகள், ஹெலிகாப்டரில் சம்பவ இடத்திற்கு வந்து இறங்கினர். விபத்துக்குள்ளான விமானத்தில் வந்த விமானிக்கு, முதலுதவி சிகிச்சை அளித்து, அதே ஹெலிகாப்டரில் விமானப்படை நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன்பின், பரங்கிமலை ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனுாரில், சமீபத்தில் வணிக பயிற்சி விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் தரையிறங்கியது. இந்நிலையில், விமானப்படை பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அசம்பாவிதம் தவிர்ப்பு
விமானப்படை பயிற்சி விமானம் விழுந்த இடத்தை சுற்றி, சிதறி கிடந்த பாகங்களை விமானப்படையினர் சேகரித்தனர். விபத்து நடந்த இடத்தை, தங்கள் பாதுகாப்பு வளைத்திற்கு கொண்டு வந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். டில்லியில் இருந்து உயர் அதிகாரிகள் குழுவினர், இன்று சம்பவ இடத்திற்கு வந்து, விபத்து குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து, 30 அடி துாரத்தில், உப்பு பேக்கிங் தொழிற்சாலை உள்ளது. அதன் மீது விமானம் விழுந்திருந்தால், உயிர் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. விமானம் சேற்றில் விழுந்ததால், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.