அனல்மின் நிலையத்தில் குண்டு வைக்க திட்டம் அல் பாசித் ரகசிய ஆவணத்தில் தகவல்
சென்னை:ஐ.எஸ்., பயங்கரவாதி அல் பாசித் மற்றும் அவரது கூட்டாளிகள், கல்பாக்கம் அனல்மின் நிலையம் மற்றும் 'சர்ச்'சுக்கு குண்டு வைக்கும் சதித்திட்டத்துடன் செயல்பட்டது தெரிய வந்துள்ளது.சென்னை புரசைவாக்கத்தில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போல தங்கி இருந்த, மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லைவாசலைச் சேர்ந்த அல் பாசித், 42, நேற்று முன்தினம், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் தங்கி இருந்த இடம் மற்றும் திருமுல்லைவாசலில் உள்ள கூட்டாளிகள் வீடு என, 20 இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றில் டிஜிட்டல் ஆவணங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன. அதன் வழியே, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின், தமிழக பிரிவு தலைவராக செயல்பட்ட அல் பாசித் மற்றும் அவரது கூட்டாளிகள், பயங்கரவாதி இக்காமா சாதிக் பாட்ஷா மற்றும் ஹாஜா பக்ருதீன் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டது தெரிய வந்துள்ளது. அல் பாசித் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, சர்ச் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையத்தில் குண்டு வைக்க திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறுகையில், 'அல் பாசித் மற்றும் அவரது கூட்டாளிகள், இலங்கையில், 2019ல், ஈஸ்டர் நாளில் தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய சஹ்ரான் ஹாசிம் தலைமையில் செயல்பட்டு வந்துள்ளனர். அல் பாசித் உள்ளிட்டோரின் சதித்திட்டங்கள் குறித்து தொடர் விசாரணை நடக்கிறது' என்றனர்.