உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயர்கல்விக்கு பெரும் துரோகம் செய்யும் அரசு : திமுக மீது அன்புமணி குற்றச்சாட்டு

உயர்கல்விக்கு பெரும் துரோகம் செய்யும் அரசு : திமுக மீது அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: 10 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில்,2708 பேர் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என திமுக அரசு அறிவித்திருப்பது உயர்கல்விக்கு பெரும் துரோகம் செய்துள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்பப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் அறிவித்திருக்கிறார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் வெறும் 2708 இடங்களை மட்டும் நிரப்புவது கண்டிக்கத்தக்கது.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் பணியிடம் கூட நிரப்பப்படவில்லை. அதனால் அரசு கலைக்கல்லூரிகளின் கல்வித்தரம் சீரழிந்திருக்கிறது. அரசு கலைக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்ட போதிலும், அவற்றில் சேர மாணவர்கள் தயாராக இல்லை என்பதும், அதனால் 25 சதவீத இடங்கள் இன்னும் காலியாகக் கிடக்கின்றன என்பதும் தான் அரசு கல்லூரிகளின் அவலநிலைக்கு சான்று ஆகும்.உயர்கல்வித்துறையை திமுக அரசு தொடர்ந்து சீரழித்து வருவதை மீண்டும், மீண்டும் பாமக அம்பலப்படுத்தியதன் விளைவாகத் தான் இப்போது 2708 இடங்களை நிரப்ப தமிழக அரசு முன்வந்துள்ளது. தமிழக அரசு கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 9000 பணியிடங்கள் காலியாக இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டது. அதன் பின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், புதிதாக ஏற்படுத்தப்பட்ட பணியிடங்கள் ஆகியவற்றையும் சேர்த்தால் காலியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கக்கூடும்.இந்த நேரத்தில் அதை விடக் குறைவாக 2708 பேர் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என திமுக அரசு அறிவித்திருப்பதன் மூலம் உயர்கல்விக்கு பெரும் துரோகம் இழைத்துள்ளது.தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையை மீண்டும், மீண்டும் சீரழித்த குற்றத்திலிருந்து திமுக அரசு தப்ப முடியாது. உயர்கல்வித்துறையின் நலனில் தமிழக முதல்வருக்கு அக்கறை இருந்தால் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள சுமார் 10 ஆயிரம் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். அதில் பல்கலைக்கழக மானியக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி கொண்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை