உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு செய்தால் தப்பு... நீங்க செய்தால் மட்டும் சரியா? தமிழக அரசுக்கு அன்புமணி வைத்த செக்!

மத்திய அரசு செய்தால் தப்பு... நீங்க செய்தால் மட்டும் சரியா? தமிழக அரசுக்கு அன்புமணி வைத்த செக்!

சென்னை: போதையில்லா தமிழ்நாடு இயக்கத்திற்கு இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல், ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் வல்லுனர்களை நியமிப்பதுதான் திராவிட மாடல் அரசின் சமூகநீதியா? என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிரானது

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில்உள்துறை மற்றும் மதுவிலக்கு அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள போதையில்லா தமிழகம் இயக்கத்திற்கு ஊடகம், திறன் பயிற்சி, தரவு பகுப்பாய்வு ஆகியவற்றுக்கான 3 வல்லுனர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும், அவர்களுக்கு மாதம் ரூ.1.50 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அறிவித்திருக்கிறார். இந்தப் பணிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை, வயது வரம்பு இல்லை, எந்த அடிப்படையில்வல்லுனர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற எந்த விவரமும் அறிவிப்பில் இடம் பெறவில்லை. சமூகநீதிக்கு எதிரான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.

ஏற்றுக்க முடியாது

ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணி தான் என்றாலும் ஒப்பந்தக் காலம் நீட்டிக்கப்படலாம். மாதம் ரூ.1.50 லட்சம் என்பது தமிழக அரசின் துணைச் செயலாளர் நிலையிலான பணிக்கான ஊதியம் ஆகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணியிடத்தை இட ஒதுக்கீடு இல்லாமல், போட்டித் தேர்வு இல்லாமல் நிரப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களுக்கு கொல்லைப்புற வழியாக அரசு பணியை வழங்குவதற்காகவே இந்த ஆள்தேர்வு நாடகம் அரங்கேற்றப்படுவதாக சந்தேகிக்கத் தோன்றுகிறது.

வாபஸ்

மத்திய அரசில் இணைச் செயலாளர், இயக்குனர் நிலையிலான பணிகளுக்கு நேரடி நியமனம் மூலம் 45 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. இட ஒதுக்கீட்டு விதிகளை புறக்கணித்து விட்டு வெளியிடப்பட்ட இந்த ஆள்தேர்வு அறிவிக்கையை பா.ம.க., உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. தமிழக முதல்வர் ஸ்டாலினும் கடைசி நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்தார். இறுதியில் இந்த ஆள்தேர்வு அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.

நியாயமா?

இட ஒதுக்கீடு இல்லாத மத்திய அரசின் நேரடி ஆள்தேர்வு முறையை முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்த்தது சரியான நிலைப்பாடு. பா.ம.க.,வின் அதே நிலைப்பாட்டை எடுத்ததற்காக அவரை பாராட்டுகிறேன். ஆனால், மத்திய அரசு செய்ததை விட மிக மோசமான சமூக அநீதியை, இட ஒதுக்கீடு இல்லாமல், தாங்கள் விரும்பியவர்களை தேர்வு செய்யும் வகையில் ஆள்தேர்வு அறிவிக்கையை தமிழக அரசு வெளியிட்டது எந்த வகையில் நியாயம்? இந்த சமூக அநீதியை முதல்வர் ஆதரிக்கிறாரா அல்லது தமக்கு தெரியாமல் நிகழ்ந்து விட்டது என்று தட்டிக்கழிக்கப் போகிறாரா?

குற்றச்சாட்டு

ஓராண்டுக்கான ஒப்பந்தப் பணி தான் என்று கூறி, இந்த சமூகநீதிப் படுகொலையை தமிழக அரசு நியாயப்படுத்த முனையக் கூடாது. ஒப்பந்தப் பணிகளாக இருந்தாலும், தற்காலிக பணிகளாக இருந்தாலும் அதில் இட ஒதுக்கீட்டு முறை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு தொடர்ந்து இந்தக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் பல துறைகளில் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் ஆலோசகர்கள், சிறப்புப் பணி அதிகாரிகள் என்ற பெயரில் ஆட்சியாளர்களுக்கு வேண்டிய பலர் அதிக ஊதியத்தில் நியமிக்கப்பட்டு வருவதாக தமிழக தலைமைச் செயலக சங்கம் குற்றஞ்சாட்டியிருக்கிறது.

ரத்து செய்க

சமூகநீதி காக்கும் அரசு என்று கூறிக் கொண்டு , இட ஒதுக்கீட்டை இந்த அளவுக்கு திமுக அரசு படுகொலை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல், போதையில்லா தமிழ்நாடு இயக்கத்திற்கு ரூ.1.5 லட்சம் ஊதியத்தில் வல்லுனர்கள் நியமிப்பதற்கான அறிவிக்கையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கடந்த காலங்களில் இதேபோல், இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் செய்யப்பட்ட நியமனங்கள் குறித்த முழு விவரங்களையும் வெளியிடுவதுடன், அந்த நியமனங்களையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 29, 2024 20:30

எதில்தான் திமுகவுக்கு இரட்டை நிலைப்பாடு இல்லை ???? அக்கட்சி நாட்டின் சாபக்கேடு .....


Suppan
ஆக 29, 2024 16:42

இது வடிகட்டிய பயித்தியக்காரத்தனம். அரசோ, அரசு நிறுவனமோ தனியார் நிறுவனமோ எல்லாவிதமான திறமைகளும் நிறுவன ஊழியர்களுக்கு இருக்கும் எனச்சொல்ல முடியாது. தேவையும் இல்லை . அவ்வப்பொழுது தேவைக்கேற்ப வெளியிலிருந்து தேவையான திறமை உள்ளவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு நியமிப்பது எந்த விதத்தில் தவறு.


Puli Kesi
ஆக 29, 2024 16:17

புதுச்சேரி அரசிலும் இப்படி தான் உள்ளது. ஓய்வு பெற்ற அதிகாரிகள் பலர் Consultants ஆலோசகர்கள் என்ற பதவியில் 70 வயது வரை பெரிதாக ஏதும் வேலை செய்யாமலே சம்பளம் வாங்குகின்றார்கள். இவர்களின் பணி நியமனத்தில் சமூகநீதி என்று ஏதும் இல்லை.


முக்கிய வீடியோ