த.வெ.க.,வினருக்கு முன்ஜாமின் அனுமதி
மதுரை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.,27 ல் த.வெ.க., பிரசார கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பேசியபோது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது மயக்கமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதை தாக்கியதாக பதிவான வழக்கில் த.வெ.க., நிர்வாகிகள் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், தமிழமுதன், பெரியசாமி, ஹரிசுதன், கவுதம் தனசேகர், அன்புமணி, செந்தில்குமார், சுப்பிரமணி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் பாண்டி ஆஜரானார். நீதிபதி,'முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. மனுதாரர்கள் 2 வாரங்களுக்கு சேலம் டவுன் போலீசில் ஆஜராக வேண்டும்,' என உத்தரவிட்டார்.