யானைத்தந்தம் விற்க முயற்சி; ஜமீன் வாரிசு தப்பி ஓட்டம்
தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே யானை தந்தம் விற்க முயன்ற போடி ஜமீன் குடும்பத்தை சேர்ந்த வடமலை ராஜபாண்டியனை வனத்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜமீன் குடும்பத்தை சேர்ந்த வடமலை ராஜபாண்டியனுக்கு சொந்தமான 1.6 மீட்டர் நீளமுள்ள பெரிய யானை தந்தத்தை மதுரை வளர் நகர் பகுதியில் உள்ள தனியாரிடம் விலை பேசி விற்க முயன்றதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் ரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற இடைத்தரகர்கள் ரகுநாத், சுப்பிரமணி, ரமேஷ் மணிகண்டன் மற்றும் சுதாகர் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட யானை தந்தத்தையும் பறிமுதல் செய்தனர். வனத்துறை அதிகாரிகள் வருவதை அறிந்த ஜமீன் குடும்பத்தை சேர்ந்த வடமலை ராஜபாண்டியன் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றார். தலைமறைவான வடமலை ராஜபாண்டியனை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.