பஸ் டிரைவரின் பணி நேர கட்டுப்பாடுகளை தளர்த்தணும்
சென்னை: 'பஸ் டிரைவர்களின் பணி நேரக் கட்டுப்பாடுகளை, அரசு போக்குவரத்து நிறுவனங்கள் தளர்த்த வேண்டும்' என, த.மா.கா., தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே, அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபகாலமாக பஸ் விபத்துகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அரசு பஸ் டிரைவர்களுக்கு பணி நேரக் கட்டுப்பாடுகளை, அரசு போக்குவரத்து கழகங்கள் தளர்த்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான நிவாரணத்தை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். வாசன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், 'டிட்வா புயல் தாக்கத்தால், பல்வேறு மாவட்டங்களில், பரவலாக கன மழை பெய்து, விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்துள்ளன. 'விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனே ஆய்வு செய்து, ஏக்கருக்கு, 35,000 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்' என கூறியுள்ளார்.