டங்ஸ்டன் திட்டம் ரத்து நமக்கான வெற்றி மேலுாரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
மதுரை: ''பொதுமக்கள் போராட்டம், தமிழக அரசின் சட்டசபை தீர்மானம் போன்றவற்றால் மேலுார் டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது நமக்கான வெற்றி,'' என, மேலுாரில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மதுரை மாவட்டம், மேலுார் அரிட்டாபட்டியில் அவர் மேலும் பேசியதாவது:அமைச்சர் மூர்த்தி தலைமையில், அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் சென்னையில் என்னை சந்தித்து, 'டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது' என்றனர். அழுத்தம்
அவர்களிடம், 'நம் எம்.பி.,க்கள், கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் பார்லிமென்டில் அழுத்தம் கொடுத்தனர். உங்களால் உருவாக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சியில், தமிழக சட்ட சபையில் அ.தி.மு.க., உட்பட அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு கிடைத்த வெற்றி இது' என்றேன். மேலும், 'நான் முதல்வராக இருக்கும் வரை இந்த டங்ஸ்டன் சுரங்க திட்டம் வராது' என, உறுதியளித்தேன். ஒருவேளை அப்படி வந்தால் பதவியில் இருக்க மாட்டேன் என்றும் உறுதியாக கூறினேன்.இந்நிலையில், திட்டம் ரத்தானதால் என்னை சந்தித்து பாராட்டு தெரிவிக்க வேண்டும் என, அழைத்ததால் இங்கு வந்துள்ளேன். இந்த பாராட்டு எனக்கானதல்ல; உங்களிடம் இருந்து என்னை நான் பிரித்து பார்க்கவில்லை. இது நமக்கானது. என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். இங்குள்ளோர் முகங்களை பார்க்கும்போது, நீண்ட நேரம் பேச வேண்டும் என்ற ஆசை உள்ளது.ஆனால், மேலும் இரு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை செல்ல வேண்டும். மீண்டும் உங்களை சந்திக்க வருவேன். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வர உள்ளது. உங்கள் ஆதரவு யாருக்கு என, முடிவு செய்து விட்டீர்கள் என்பது எனக்கு தெரியும். இந்த ஆட்சி அண்ணாதுரை, கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. அது உங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். ஏ.வள்ளாலபட்டியில் முதல்வர் பேசியதாவது:இத்திட்டம் கொண்டு வந்ததற்கு, மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், கனிம வளங்களை ஏலம் விடலாம் என, மத்திய அரசு கொண்டு வந்த சட்டமே முக்கிய காரணம். அதற்கு அ.தி.மு.க., எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. குறிப்பாக, தம்பிதுரை எம்.பி., எதிர்த்துப் பேசவில்லை. 2 மாதத்தில் தீர்வு
மத்திய அரசு என்னென்ன கொடுமைகளை செய்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். டில்லியில் விவசாயிகள் இரு ஆண்டுகள் போராட்டம் நடத்தினர். நீங்கள் இரண்டே மாதத்தில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து இருக்கிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.அமைச்சர்கள் பெரியசாமி, மூர்த்தி, தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பொதுமக்களிடம் முதல்வர் மனுக்களை பெற்றார். ஏ.வள்ளாலபட்டியில் முதல்வருக்கு கள்ளழகர் சிலை பரிசளிக்கப்பட்டது.