| ADDED : ஜூலை 25, 2011 09:14 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில், காரும் மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள். கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜோஷி மகள் ஐஸ்வர்யா (24), திருச்சூர் ராஜூ மகன் அர்ஜூன் (24), கொச்சி ராமச்சந்திரன் மகள் ராதிகா (24), சென்னை ஊரப்பாக்கம் அரவிந்த் மகன் அஷ்வின் (24), அதே பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் யேசுதாஸ் (27) ஆகியோர் செங்கல்பட்டையடுத்த மகேந்திரா சிட்டியிலுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் இன்ஜினியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு அவர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியே சென்னை வந்து கொண்டிருந்த போது, மாமல்லபுரத்தையடுத்த சூலேரிகாடு என்ற இடத்தில் அவர்கள் வந்த கார் மீது காலி மணல் லாரி மோதியது. இதில் ஐஸ்வர்யா, அர்ஜூன் ஆகியோர் சம்பவ இடத்திலேயும், ராதிகா மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். யேசுதாஸ் மற்றும் அஷ்வின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.