ஆவின் குளறுபடிகளால் தாமதமாகிறது தணிக்கை
சென்னை: ஆவின் நிறுவனத்தில், பல்வேறு குளறுபடிகள் காரணமாக, தணிக்கை தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவின் நிறுவனத்தில், ஒவ்வொரு நிதியாண்டு முடிந்ததும், அடுத்த நான்கு மாதங்களுக்குள், அந்த ஆண்டுக்குரிய கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டு, செப்டம்பர் மாதத்திற்குள் தணிக்கை முடிக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த 2024 - -25ம் நிதியாண்டு முடிந்து, ஓராண்டு கடந்த நிலையில், பல மாவட்டங்களில் அமைந்துள்ள ஆவின் பால் ஒன்றியங்களில், தணிக்கை பணி முடிக்கப்படாமல் உள்ளது. சட்டசபையில், எதிர்க்கட்சிகள், தணிக்கை விபரங்களை கேட்டு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், சென்னை ஆவின் பெடரேஷன்; ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட ஒன்றியங்களில், தணிக்கைக்கு கணக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. ஆவின் நிறுவனத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதால், கணக்கை சமர்ப்பிக்க காலதாமதம் செய்வதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தணிக்கை முடிந்த பின், குளறுபடிகள் விபரம் வெளியே தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.