UPDATED : டிச 23, 2025 06:42 PM | ADDED : டிச 23, 2025 02:38 PM
சென்னை: உங்களை ஒரு பொருட்டாகவே டில்லி மதிக்கவில்லையே என 100 நாள் வேலைத் திட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் படி 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா? 100 நாட்கள் வேலை திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி. ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது சட்டமாக இருந்தபோதே அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் அலைக்கழித்த பாஜ அரசு இப்போது 1008 நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலை தரப்போகிறதா?உண்மையைச் சொன்னால், ஒருநாள் வேலைக்குக் கூட இனி மத்திய அரசு உத்தரவாதம் கொடுக்காமல் கடமையைக் கைகழுவியுள்ளது. மஹாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என்று உங்கள் ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே. என்ன ஆனது? உங்களை ஒரு பொருட்டாகவே டில்லி மதிக்கவில்லையே. மாநில அரசின் மீது 40% நிதிச்சுமையை ஏற்றும் எதேச்சாதிகாரமும் கைவிடப்படவில்லையே? டில்லியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிவு உங்களுக்கு இருக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முட்டுகளையாவது தவிர்க்கலாம். மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பாஜ அரசால் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு வக்காலத்து வாங்கி, உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவூட்டுகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.