கவர்னர் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்த முதல்வர் முயற்சி: பழனிசாமி
சென்னை: கவர்னர் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்த, முதல்வர் ஸ்டாலின் முயற்சிப்பதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டினார். சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின், அவர் அளித்த பேட்டி: தி.மு.க., அரசு தயாரித்த உரையை, சட்டசபையில் படிக்காமல் வெளிநடப்பு செய்த கவர்னர் ரவி, அது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளர். அதில், தி.மு.க., ஆட்சியின் உண்மை நிலவரத்தை, வெளிப்படுத்தியுள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில், சட்டம் ஒழுங்கு பேணிக் காக்கப்பட்டது; சட்டத்தின் ஆட்சி நடந்தது. தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. நாள்தோறும் கொலை நிலவரம் வெளியாகும் அளவுக்கு மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக உருவாகி விட்டது. இதைத் தடுக்க பலமுறை வலியுறுத்தியும், இந்த அரசு செவிசாய்க்கவில்லை. இப்படிப்பட்ட மோசமான ஆட்சி அகற்றப்பட வேண்டும்; முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, வெளிநடப்பு செய்தோம். இந்தியாவிலேயே சூப்பர் முதல்வர் என, தனக்கு தானே ஸ்டாலின் கற்பனை செய்து கொள்கிறார். கவர்னர் சொல்வது எல்லாம் உண்மைதான். அமைச்சரவை தயாரித்த உரையில், என்னென்ன தவறு இருக்கிறது என்பதை, கவர்னர் சுட்டிக்காட்டத் தானே வேண்டும். தவறான செய்தியை கவர்னர் வாசிக்க மாட்டேன் என்கிறார். அவரது நியாயம் அதுதான். கவர்னர் குறித்து என்ன பேச வேண்டும் என்பதை, முன்கூட்டியே தயாரித்து வந்து முதல்வர் பேசுகிறார்; தீர்மானமாக கொண்டு வருகிறார். கவர்னர் இப்படி பேசுவார் என்பது, அவருக்கு எப்படி தெரியும்? கவர்னர் மீது தவறான எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், முதல்வர் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். கவர்னர் உரையில் வேறு எந்தக் கருத்தும் சொல்ல முடியாது. அதுதான் மரபு. கவர்னர் உரை மட்டும் தான் இடம்பெற வேண்டும். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தன் கருத்துகளை பதிவு செய்கிறார். இது மரபை மீறிய செயல். இவ்வாறு அவர் கூறினார்.