சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலரை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு
சென்னை:சென்னை சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலரை கைது செய்து, இன்று ஆஜர்படுத்த, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில், ரத்தினசபாபதி என்பவர், தனியார் கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக, 2019ல் சிவில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், 'தன் தரப்பு கோரிக்கையை நியாயப்படுத்த, சி.எம்.டி.ஏ., என்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் ஆவணங்கள் தேவைப்படுகின்றன.'அந்த ஆவணங்கள் இல்லாததால், எதிர்தரப்பினர் தேவையில்லாமல் வழக்கை, பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருகின்றனர்' என, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும், இந்த வழக்கு தொடர்பாக, சி.எம்.டி.ஏ., வசம் உள்ள ஆவணங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.இது தொடர்பாக, சாட்சியம் அளிக்க, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் நேரில் ஆஜராக, சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு அனுப்பப்பட்ட சம்மன், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் தரப்பில் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலரை கைது செய்து இன்று ஆஜர்படுத்த, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் பணியாளருக்கு, கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.