சிலம்பம் போட்டியில் விதிமுறைகளால் குழப்பம்
மதுரை:தமிழகத்தில், பள்ளிகளில் ஒரு விதமாகவும், சங்கங்களில் ஒரு விதமாகவும், சிலம்ப விதிமுறைகள் கற்றுத்தரப்படுவதால், ஒருங்கிணைத்து ஒரே விதமான விதிமுறையை உருவாக்க விளையாட்டு துறை முன்வர வேண்டும் என்கின்றனர், அரசு பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள். அவர்கள் கூறியதாவது: பள்ளிக்கல்வி துறை மூலம் மாநில அளவிலும், எஸ்.ஜி.எப்.ஐ., எனப்படும், தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் மூலம் மத்திய அரசின் தேசிய விளையாட்டு போட்டிகளிலும் சிலம்பம் இடம் பெறுகிறது. ஒவ்வொரு விளையாட்டு போட்டிக்கும் குறிப்பிட்ட விதிமுறைகள், உலகளவில் ஒரே மாதிரியாக பின்பற்றப்படுகின்றன. உதாரணமாக, கால்பந்து போட்டியில், 'பெனால்டி கிக்' என்றால், உலகளவில் அதற்கு ஒரே அர்த்தம் தான் எடுத்துக் கொள்ளப்படும். சிலம்ப விளையாட்டுக்கு என, தமிழக அளவில் ஒரே விதமான விதிமுறைகள் முழுமையாக இல்லை. பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் ஒரு விதமான சிலம்ப விதிமுறைகளை மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர். சங்கங்கள் மூலம் பயிற்சியாளர்களும், பரம்பரை, பரம்பரையாக சிலம்பாட்ட பயிற்சி கற்றுத் தருபவர்களும், வேறு விதமாக விதிமுறைகளை கற்றுத் தருகின்றனர். இதனால், மாணவர்கள் தான் போட்டியின் போது பாதிக்கப்படுகின்றனர். பள்ளிக்கல்வி துறை சார்பிலும், முதல்வர் கோப்பைக்கான சிலம்ப போட்டி நடத்தும் போதும், உடற்கல்வி ஆசிரியர்கள், சங்கங்கள் இடையே எந்த விதிமுறையை பின்பற்றுவது என்பதில் அடிக்கடி முட்டல், மோதல் ஏற்படுகிறது. இதனால், பல மணி நேரம் போட்டி நிறுத்தப்படுகிறது அல்லது வேறொரு நாளுக்கு மாற்றப்படுவதால் அவதிப்படுவது மாணவர்களே. இதை தவிர்க்க வேண்டும் எனில், விளையாட்டு துறை சார்பில் தகுதிவாய்ந்த சிலம்ப ஆசிரியர்கள் மூலம், புதிதாக விதிமுறைகளை வகுக்க வேண்டும். அரசு, அந்த விதிமுறைகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு கற்றுத் தருவதோடு, நடுவர்க ளுக்கும் சிறப்பு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்க வேண்டும். இதன் மூலம் பள்ளிக்கல்வி துறை நடத்தும் சிலம்ப போட்டிகளில் பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கலாம். மேலும், அங்கீகாரம் இல்லாத சிலம்ப சங்கங்களின் பட்டியலை அரசு வெளியிட்டு, மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.