உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் கடைக்கு புது கட்டடம் வண்டலுாரில் பணிகள் இழுபறி

ரேஷன் கடைக்கு புது கட்டடம் வண்டலுாரில் பணிகள் இழுபறி

வண்டலுார்:வண்டலுாரில், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள், ஓராண்டாக மந்தமாக நடைபெற்று வருவதால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுாரில் உள்ள 15 வார்டுகளில், 40,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, ஆறு ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில், 12வது வார்டில் உள்ள எட்டாவது பிரதான சாலையில், 168 பி.என்., என்ற எண்ணுள்ள ரேஷன் கடை, வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையில் பொருட்களை இருப்பு வைக்கவும், மக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கவும், போதிய இடவசதி இல்லை. இதனால், இந்த ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட, 13.43 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, 13வது வார்டில் உள்ள பாரதி பூங்கா அருகே புதிய கட்டடம் கட்டும் பணிகள், கடந்தாண்டு துவக்கப்பட்டன. ஆனால், ஓராண்டு கடந்தும், இன்னும் கட்டுமானப் பணிகள் முழுமை அடையவில்லை. இதனால் அதிருப்தியடைந்துள்ள அப்பகுதி மக்கள், கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
செப் 13, 2025 04:15

இக் கட்டிடத்தைச் சுற்றி புதர் மண்டிக் கிடப்பதைப் பார்த்தால் வரும் காலத்தில், தலைவர் பாணியில், அரிசியை எலியும், சர்க்கரையை எறும்பும், கோணியைக் கரையானும் தின்று விட்டது என்று சொல்லலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை