மேலும் செய்திகள்
தீர்ப்பு தள்ளிவைப்பு
08-Dec-2024
சென்னை:கொரோனா குமார் திரைப்படம் தொடர்பாக, வேல்ஸ் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கும், நடிகர் சிம்புவுக்கும் இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததால், நீதிமன்றத்தில் செலுத்திய ஒரு கோடி ரூபாயை, நடிகர் சிம்புவிடம் திருப்பி அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா குமார் என்ற பெயரில் படம் தயாரிக்க, 'வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்' நிறுவனம் திட்டமிட்டிருந்தது.இப்படத்தில் நடிக்க, நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் செய்தது. படத்தில் நடிக்க, 9.5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 4.5 கோடி ரூபாய் முன்பணமாக சிம்புவுக்கு, 2021ல் கொடுக்கப்பட்டது. அவர் முன்பணத்தை பெற்றுக்கொண்டு திட்டமிட்டபடி படப்பிடிப்புக்கு வரவில்லை. எனவே ஒப்பந்தப்படி, கொரோனா குமார் படத்தை முடிக்காமல், வேறு படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வேல்ஸ் பிலிம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த, நடிகர் சிம்புவுக்கு உத்தரவிட்டுஇருந்தது.மேலும், இவ்விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.கண்ணனை, மத்தியஸ்தராகவும் நியமித்து உத்தரவிட்டது.இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சிம்பு தரப்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி,''மத்தியஸ்தர் முன் உள்ள வழக்கை, இரு தரப்பும் திரும்பப் பெற்று விட்டன. எனவே, 'டிபாசிட்' செய்யப்பட்ட தொகையை, வட்டியுடன் சேர்த்து, ஒரு கோடியே, 4 லட்சத்து 98,917 ரூபாயை திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும்,'' என்றார்.அதை ஏற்ற நீதிபதி, டிபாசிட் தொகையை சிம்புவிடம் வட்டியுடன் திருப்பி அளிக்கும்படி, உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
08-Dec-2024