தேவநாதன் உட்பட மூவரை 4 நாட்கள் விசாரிக்க அனுமதி
சென்னை:மயிலாப்பூரில், 'தி ஹிந்து பெர்மனன்ட் பண்ட்' என்ற நிதி நிறுவனம், நுாற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து, 24.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அதன் இயக்குனர் தேவநாதன், அவரது கூட்டாளிகள் குணசீலன், மகிமைநாதன், தேவசேனாதிபதி, சுதிர் சங்கர் ஆகியோர், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.இவர்களில், தேவநாதன், சுதிர் சங்கர், தேவசேனாதிபதி ஆகியோரை, நான்கு நாட்கள் விசாரிக்க அனுமதி கேட்டு, 'டான்பிட்' எனும் நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர்.மனுவில், 'மோசடி தொடர்பாக தேவநாதனின் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ஆறு லாக்கர்களை திறக்க வேண்டியதுள்ளது. மோசடி செய்த 300 கோடி ரூபாய் எங்கு வைத்துள்ளார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மனு, சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.மலர்வாலண்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, மூவரையும் நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுமதி அளித்த நீதிபதி, வரும் 23ம் தேதி மாலை 4:00 மணிக்கு மூவரையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.