உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நன்கொடை, லஞ்சம் வாங்காதீங்க: சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கவர்னர் அறிவுரை

நன்கொடை, லஞ்சம் வாங்காதீங்க: சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கவர்னர் அறிவுரை

சென்னை: “பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகள் அல்லது லஞ்சம் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது,” என, சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, கவர்னர் ரவி அறிவுரை வழங்கினார்.சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி.,யின் நேர்முகத் தேர்வுக்கு முன், அம்மாணவர்களுக்கு கவர்னர் ரவி கடந்த மார்ச்சில் பயிற்சி அளித்தார். அதில், வெற்றி பெற்ற ஒன்பது மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க, நேரில் அழைத்திருந்தார். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, ஒன்பது தொகுதிகள் உடைய, 'கம்பராமாயணம்' புத்தகங் களை பரிசாக வழங்கினார்.

கவனமாக இருங்கள்

பின், மாணவர்களிடம் கவர்னர் பேசியதாவது: யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெறுவது எளிதல்ல. உங்களுடைய வெற்றிக்கு உங்கள் பெற்றோர் முக்கிய காரணம். வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும்போது, மிகக் கவனமாக இருங்கள். இந்திய குடிமைப்பணி பயணத்தில், கடுமையான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். அந்த சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கைத் துணை ஒத்துழைப்பு தரக்கூடியவராக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணை, உங்கள் வேலை பற்றிய புரிதல் உள்ளவராக இருக்க வேண்டும். பல சவாலான, கடினமாக சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். அதற்கு உறுதுணையாக இருக்கும் துணையை தேர்வு செய்யுங்கள்; இல்லையெனில் நெருக்கடியை சந்திக்க நேரிடும். அதேபோல, உங்கள் உடல்நலம் முக்கியம். தற்போது, இளம்வயதிலேயே சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. ஒரு அதிகாரியாக, நம் உடலை நாம் பேணி காக்க வேண்டும். உடல்நல பாதிப்புகளுக்கு அப்பாற்பட்டவர்களாக நாம் இருக்க வேண்டும்.நீங்கள் தனிமனிதர் இல்லை; உங்களை நம்பி பலர் உள்ளனர். தினமும் ஒரு மணி நேரம் யோகா, உடற்பயிற்சி செய்யுங்கள். உங்களுக்கு சிறந்த ஊதியத்தை, மத்திய அரசு தருகிறது. சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். பொதுமக்களிடம் இருந்து நன்கொடை அல்லது லஞ்சம் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

பணத்தை சேமியுங்கள்

இப்போதிருந்தே பணத்தை அதிகமாக சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள். என் ஆரம்ப சம்பளம், 720 ரூபாய். ஆனால், இப்போது உங்களின் ஆரம்ப சம்பளம், 1 லட்சம் ரூபாயாக இருக்கும். இன்னும் நான்கு ஆண்டுகளில் அது அதிகரிக்கும். தேர்ச்சி பெற்றுவிட்டால், நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என நினைக்காமல், தொடர்ந்து படிக்க வேண்டும். இலக்கியம் படிப்பது உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். புத்தகம் படிப்பது உங்கள் அறிவையும், செயலையும் மேம்படுத்தும்.சில ஆண்டுகளுக்குப் பின், உங்கள் மேலதிகாரிகள் உங்களை கவனிப்பர். அப்போது, உங்கள் திறமையை வைத்து, வேறு முக்கிய துறைகளில் பயன்படுத்த நினைப்பர். அதற்கு, வாசிப்பு நல்வாய்ப்பாக இருக்கும். நாட்டைப் பற்றி அதிகமாக படியுங்கள்; தெரிந்து கொள்ளுங்கள். இந்தியா, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது; கலாசாரத்தால் பின்னி பிணைந்தது. அது தொடர்பான, வரலாற்றை அறிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அக்கறையும் வியப்பளிக்கிறது

இந்திய அளவில், 769வது இடத்தை பிடித்துள்ளேன். இரண்டாவது முயற்சியில் தேர்ச்சி பெற்று உள்ளேன். கட்டுமான இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை படித்துள்ளேன். என் விருப்பம், ஐ.ஏ.எஸ்., ஆவதுதான். ஆனால், என், 'ரேங்க்' அடிப்படையில், ஐ.ஆர்.எஸ்., கிடைக்கும். மீண்டும் முயற்சி செய்வேன். கவர்னர் ரவி கொடுத்த பயிற்சி உறுதுணையாக இருந்தது. என் அப்பா முன்னாள் ஆசிரியர்; அம்மா ஆசிரியை. கணவர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் அதிகாரியாக உள்ளார்.- எஸ்.கிருத்திகா, சென்னைஇந்திய அளவில், 424வது இடத்தை பிடித்துள்ளேன். பெற்றோர், அக்கா மற்றும் மாமா ஆகியோர் தான் என் வெற்றிக்கு காரணம். மனரீதியில், உணர்வு ரீதியில், நிதி ரீதியில் வரும் பின்னடைவுகளுக்கு, குடும்பத்தின் உதவி முக்கியமானது. ஐ.ஏ.எஸ்., ஆக விரும்புவோர், இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி பெற்று விடுவதாக, தங்கள் பெற்றோருக்கு உறுதியளிக்க வேண்டும்.- ஆர்.கே.கோகுல், சிவகாசிஇந்திய அளவில், 744வது இடத்தை பிடித்துள்ளேன். இது, என் ஒன்பதாவது முயற்சி; இறுதி முயற்சியும்கூட. நான்கு முறை நேர்முகத்தேர்வு வரை சென்றுள்ளேன். ஆனாலும், வாய்ப்பு கிடைக்காதது கவலை அளித்தது. தற்போது, ஐ.ஆர்.எஸ்., கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெற்றோருக்கும், அறம் ஐ.ஏ.எஸ்., அகாடமிக்கும் நன்றி. கவர்னரின் அறிவுரை, எங்கள் மீதான அக்கறை வியப்பாக இருந்தது.- எம்.ராஜபிரபு, பண்ருட்டி, கடலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ashokkumar Kp
ஏப் 26, 2025 11:51

எல்லோருக்கும் உதவி செய்யுங்கள் சாதி மதம் மொழி எதுவும் பார்க்கக கூடாது


Tamil Selvan
ஏப் 26, 2025 08:37

அறிவுரை சொல்ல தகுதி வேண்டாமா ஆர் என் ரவி அவர்கள் இதை சொல்ல தகுதி இல்லை


TNP
ஏப் 25, 2025 11:13

அரசு ஊழியர்கள் செய்யும் அட்டகாசம் லஞ்ச லாவண்யங்கள் தாங்க முடியாமல் மக்கள் திணறுகின்றனர்


முருகன்
ஏப் 25, 2025 10:46

லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் நாட்டில் சுதந்திரமாக மீண்டும் அதோ பதவியில் இருக்கும் வகையில் இருக்கும் சட்டத்தை மாற்றும் வரை லஞ்சம் ஊழலை ஒழிக்க முடியாது


அப்பாவி
ஏப் 25, 2025 08:23

கவுனரா வரப் பாருங்க. அரசு ஓய்வில் சம்பளம், மாலை, மரியாதை எல்லாம் கிடைக்கும்.


guna
ஏப் 25, 2025 11:43

ஆனாலும் உனக்கு எப்பவுமே அலுமினிய தட்டுதான்...


Ramachandran Rajagopal
ஏப் 25, 2025 07:52

இந்த நாட்டில் லஞ்சம் இன்றேல் அரசு சேவை இல்லை என்ற நிலை உள்ளதால் தான் அரசு பணிகளில் விரும்பி சேர்க்கின்றனர்.பதவி உயர்வு என்பது தகுதி மற்றும் திறமை அடிப்படையில் வழங்குவது இல்லை.யார் லஞ்ச ஊழலில் முன்னோடியாக இருந்து அதிகமாக உயர் அதிகாரிகளுக்கு பங்கு தருகிறார்களோ அவர்களுக்குத் தான் பதவி உயர்வு.


சண்முகம்
ஏப் 25, 2025 06:29

அதுக்குத்தானே வர்றாங்க. செய்யாதேன்னு சொன்னா?


புதிய வீடியோ