வரும் 28 ல் மீண்டும் ஆஜராக கதிர் ஆனந்திற்கு ஈ.டி., உத்தரவு
சென்னை:'விசாரணைக்கு வரும் 28 ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும்' என, தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்திற்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்திடம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று முன் தினம், காலை, 10:30 மணியில் இருந்து, இரவு, 7:45 மணி வரை விசாரணை நடந்தது. விசாரணை முடிந்து வெளியே வந்தவர், '2019 லோக்சபா தேர்தலின்போது, வேலுாரில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்துள்ளேன்' என்றார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள், 'நாங்கள் இந்த வழக்கை, பிப்.,28 ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். நீங்கள் வரும், 28ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளனர். அதற்கு முந்தைய நாள், நாங்கள் கேட்கும் ஆவணங்களுடன், உங்கள் ஆடிட்டரை அனுப்பி வையுங்கள் எனவும் தெரிவித்தள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.