உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நற்பண்புகளை உருவாக்கும் கருவி கல்வி வி.ஐ.டி., பல்கலை துணைவேந்தர் பேச்சு

நற்பண்புகளை உருவாக்கும் கருவி கல்வி வி.ஐ.டி., பல்கலை துணைவேந்தர் பேச்சு

- நமது நிருபர் -''நற்பண்பு மற்றும் சேவையின் கருவியாக, தனி மனிதர்களை உருவாக்குவதில் கல்வி முக்கிய பங்காற்றுகிறது,'' என, வி.ஐ.டி., பல்கலைக்கழக துணைவேந்தரான பேராசிரியர் டாக்டர் பஞ்சநாத சேதுராமன் தெரிவித்தார்.பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஆந்திர மாநிலம், புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் நேற்று, ஸ்ரீசத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின், 43வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில், கல்வியாளரும், வி.ஐ.டி., பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருமான பேராசிரியர் டாக்டர் பஞ்சநாத சேதுராமன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:நல்ல பண்புகளை உருவாக்குவதிலும், சேவையின் கருவியாக தனி மனிதர்களை உருவாக்குவதிலும் கல்வி முக்கிய பங்காற்றுகிறது. இந்த உயர்கல்வி நிறுவனம், சுவாமிகளால் உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.இந்த பல்கலைக் கழகத்தில், புதிய தேசிய கல்விக் கொள்கையின் ஐந்து புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம், கல்வியின் முக்கியத்துவத்தை இம்மையம் எடுத்துக் காட்டுகிறது. கல்வியின் உண்மையான நோக்கமான, 'கல்வியின் முடிவே குணாம்சம்' என்பதை பகவான் விளக்கி உள்ளார்.கல்விக்கு முக்கியமான 10 'சி'க்கள் தேவை.1 ஆர்வம் (கியூரியாசிட்டி) - தொடர்ச்சியான கற்றல், ஆய்வுக்கான ஒரு தீப்பொறி.2 நம்பிக்கை (கான்பிடன்ஸ்) - தன்னை நம்புதல், சுவாமியின் போதனைகளில் வேரூன்றுவது.3 ஒருங்கிணைப்பு (கன்வெர்ஜென்ஸ்) - அறிவு, மதிப்புகளை சரியான இணக்கத்துடன் ஒன்றிணைத்தல்.4 ஒத்துழைப்பு (கொலாப்ரேஷன்) - சுவாமியை வழிகாட்டியாகக் கொண்டு, தங்கள் பயணத்தை தொடர்வோருக்கு நன்றி செலுத்துவது.5 மாற்றம் (சேஞ்ச்) - மாற்றம் ஒன்றே மாறாதது.6 அர்ப்பணிப்பு (கமிட்மென்ட்) - நேர்மை, அர்ப்பணிப்புடன் சிறந்து விளங்குதல்.7 தொடர்பு (கம்யூனிகேஷன்) - அறிவையும், மதிப்பையும் திறம்பட பகிர்தல்.8 வழிப்பாதை (கன்டியூட்) - சுவாமிகளின் அறிவுரையை பின்பற்றுதல்.9 பாத்திரம் (கேரக்டர்) - நற்பண்பு.10 தொடக்கம் (கமென்ஸ்மென்ட்) - அமெரிக்காவில் நடக்கும் பட்டமளிப்பு விழாக்களில், 'தொடக்கம்' என்ற சொல், 'கற்றல் சேவையின் வாழ்நாள் பயணத்தின் துவக்கம்' என்பதை குறிப்பிடுகிறது.இவ்வாறு 10 'சி'க்களை எப்போதும் நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். இங்கு படித்து பட்டம் பெறும் மாணவர்களாகிய நீங்கள், கற்றுக்கொண்ட விஷயங்களை நிலைநிறுத்தி, சுவாமியின் தன்னலமற்ற சேவையை, அன்பின் தீபமாக ஏற்றி வாழ வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பின், பகவான் படத்துக்கு மங்களாரத்தி காண்பிக்கப்பட்டது.

99வது பிறந்த நாள்

புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில், ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 99வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இன்று காலை 8:00 மணிக்கு வேதங்கள் ஓதப்படுகின்றன. 8:20 மணிக்கு பிரசாந்தி பஜனை குழுவினரின் குரு வந்தனம் நடக்கிறது. ஆந்திர மாநில கவர்னர் அப்துல் நசீர் உள்ளிட்டோர் பேசுகின்றனர். பகவானின் வாழ்க்கை வரலாறு வீடியோ, திவ்யாஞ்சன் சேவை, ஸ்ரீசத்ய சாய் பிரேமதரு திட்டத்தின் கீழ், 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதன் நிறைவு பூஜை, ஆன்மிக சொற்பொழிவு, பஜனை, மங்களாரத்தி நடக்கின்றன. மாலை 5:00 மணிக்கு வேதம், தங்க ரத ஊர்வலம்; 5:30 மணிக்கு ஊஞ்சல் மஹோற்சவம் நடக்கின்றன.லால்குடி கிருஷ்ணன், விஜயலட்சுமியின் வயலின், அர்வின்குமாரின் மிருதங்கம், ஆகாஷ் திரிவேதியின் தபேலா, சர்வேஷ் கார்த்திக்கின் தவில், நாராயணன் சர்மாவின் கீபோர்டு பக்தி இசை; மல்லாடி சூரி பாபு மற்றும் மல்லாடி சகோதரர்கள், பிரசாத்தின் மிருதங்கம், எம்பார் கண்ணனின் வயலின், கணபதியின் தபேலா ஆன்மிக இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பஜனையை தொடர்ந்து, மங்களாரத்தி காண்பிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ