உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலைமை செயலக கட்டடத்தில் டைல்ஸ் வெடிப்பு பதறி வெளியேறிய ஊழியர்களால் பரபரப்பு

தலைமை செயலக கட்டடத்தில் டைல்ஸ் வெடிப்பு பதறி வெளியேறிய ஊழியர்களால் பரபரப்பு

சென்னை:தலைமை செயலகத்தின் 10 மாடி கட்டடத்தில், 'டைல்ஸ்' கற்கள் திடீரென வெடித்து சிதறியதால், அரசு ஊழியர்கள் பதறி அடித்து ஓடினர்.சென்னை தலைமை செயலக வளாகத்தில், 10 மாடி நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில், பல்வேறு துறைகளின் செயலர் அறைகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளன. முதல் தளத்தில் வேளாண் துறை செயலர், பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு துறை செயலர், மெட்ரோ ரயில் சிறப்பு திட்ட துறை செயலர் அறைகள், பிரிவு அலுவலகங்கள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.

வெடித்தன

இங்குள்ள வேளாண் துறை பிரிவு அலுவலகத்தில் பதிக்கப்பட்டிருந்த, 'டைல்ஸ்' கற்கள், 20க்கும் மேற்பட்டவை படபடவென்ற சத்தத்துடன் காலை 11:30 மணி அளவில் வெடித்து சிதறின. இதனால், அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், பதறி அடித்து வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஒவ்வொரு மாடிக்கும் தகவல் பரவியது. அங்கிருந்தவர்கள், படிகளில் இறங்கி வெளியே ஓடிவந்தனர். என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், பலரும் கட்டடத்திற்கு வெளியே திரண்டனர்.டைல்ஸ் வெடிப்பு ஏற்பட்ட அலுவலகத்தின் எதிரே, பொதுப்பணி துறை சிறப்பு அலுவலர் விஸ்வநாத் அறை உள்ளது. அவர் உடனடியாக, பொதுப்பணி துறை அமைச்சர் வேலுவுக்கு தகவல் தெரிவித்தார்; அடுத்த ஐந்து நிமிடங்களில், அமைச்சர் வேலு அங்கு வந்தார்; டைல்ஸ் வெடிப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார். பொறியாளர்களை அழைத்து ஆய்வு செய்தார்.

'ஏர் கிராக்'

பின்னர், அமைச்சர் வேலு கூறியதாவது:நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடம், 1974ல் கட்டப்பட்டது. இங்கு முதல் தளத்தில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தில், 14 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட டைல்ஸ் கற்கள், 'ஏர்கிராக்' காரணமாக வெடித்து சிதறியுள்ளன. கட்டட்டத்தின் உறுதித்தன்மை குலையவில்லை; பலமாகவே இருக்கிறது. அந்த காலத்தில், மணல், சிமென்ட் பயன்படுத்தி டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. அதிக எடை மற்றும் நடமாட்டம் காரணமாக, 'ஏர்கிராக்' ஏற்பட்டு டைல்ஸ்கள் வெடித்துள்ளன. அவற்றை முழுமையாக அகற்றிவிட்டு, தற்போதுள்ள ரசாயன கலவை பயன்படுத்தி, பெரிய டைல்ஸ் கற்களை பதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு ஊழியர்கள் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.தலைமை செயலக அரசு ஊழியர் சங்க தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் அமைச்சரை சந்தித்து, 'நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்ய வேண்டும். புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 'இப்பிரச்னையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்' என்று வலியுறுத்தினர்.

அசராத அபூர்வா

இக்கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள முதல் அறையில்தான், வேளாண் துறை செயலர் அபூர்வா இருக்கிறார். தன் அறையில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் பரவியவுடன், பலரும் பதறி அடித்து ஓடினர். ஆனால், அறையை விட்டு அபூர்வா நகரவில்லை. சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்கு பின், தலைமை செயலக கட்டட பராமரிப்பு பிரிவின் செயற்பொறியாளர் குழந்தையன் உள்ளிட்ட பொதுப்பணி துறை பொறியாளர்களை அழைத்து விளக்கம் கேட்டார். வேளாண் அலுவலர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்படி, அவர்களிடம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை