| ADDED : மார் 16, 2024 11:23 PM
குன்னுார்: நீலகிரி மாவட்டம், குன்னுார் பாரஸ்ட் டேல் பகுதியில் கடந்த 12ம் தேதி தேயிலை தோட்டத்தில் பரவிய தீ அருகில் வனப்பகுதிக்கு பரவியது. இங்கு சாம்பிராணி உட்பட பல்வேறு மரங்கள் எரிந்து சாம்பலாகின.தொடர்ந்து பற்றி எரியும் வனத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் தன்னார்வலர்கள் என, 100 பேர் நான்கு நாட்களாக தீவிரம் காட்டுகின்றனர்.இருப்பினும், கட்டுக்கடங்காமல் தீ பரவி கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க நேற்று மதியம், 1:30 மணிக்கு கோவை, சூலுார் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது.இதில் இணைக்கப்பட்ட ஹெலி பக்கெட்டில், ரேலியா அணையில் இருக்கு நீர் நிரப்பி கொண்டு வந்து தீ பரவிய இடங்களில் பீய்ச்சி அடிக்கப்பட்டது.மொத்தம், 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த ஹெலி பக்கெட்டில் நான்கு முறை தீ பரவும் இடங்களில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.மலையின் ஒரு பகுதியில் தீயை அணைத்த போதும், எதிரான இடத்தில் மேற்கொள்ளப்படவில்லை. இதுவரை 30 ஏக்கர் வனப்பகுதி எரிந்துள்ளன. பசுமையான மரங்களும் தீயில் கொளுந்து விட்டு எரிந்தது. கலெக்டர் அருணா உள்ளிட்ட அதிகாரிகள் காட்டுத்தீ குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.