சென்னை : இந்தாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக, பள்ளிக் கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த 2017 - 18ம் கல்வியாண்டு முதல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய இரண்டு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு, இரண்டு வகுப்புகளிலும் பெற்ற மதிப்பெண்களுடன், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. இந்நிலையில், மாநில கல்வி கொள்கை வெளியிட்டபோது, ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறையில் இருந்த, 10, பிளஸ் 1, பிளஸ் 2 என்ற கல்வி முறையே தொடரும் என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். அதை பின்பற்றி தற்போது, பிளஸ் 1 பொதுத்தேர்வு, வரும் 2025 - 26ம் கல்வியாண்டு முதல் ரத்து செய்யப்படுவதாகவும், இனி, பிளஸ் 2 மட்டுமே பொதுத்தேர்வாக நடத்தப்பட்டு, அதன் மதிப்பெண் பட்டியல் மட்டுமே, அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும். மேலும், ஏற்கனவே நடந்த பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக, வரும் 2030 வரை, பிளஸ் 1 பொதுத்தேர்வு நடத்தி, ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்க, தேர்வுத் துறைக்கு அனுமதி வழங்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.