இளையராஜா புகைப்படம் சமூக வலைதளங்களில் பயன்படுத்த ஐகோர்ட் தடை
சென்னை: 'யு டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைதளங்களில், இசையமைப்பாளர் இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில், தன் புகைப் படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இசையமைப்பாளர் இளையராஜா மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், 'என்னை அடையாளப்படுத்தும் வகையில், என் புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என, எதையும் பயன்படுத்தக் கூடாது. 'சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி புகைப்படத்தை பயன்படுத்தியதன் வாயிலாக கிடைத்த வருமான விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். மேலும் இசை நிறுவனங்கள், சமூக வலைதளங்களுக்கு எதிராகவும், இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகள், நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது . அப்போது நீதிபதி, 'பெயரை, புகைப்படங்களை பயன்படுத்துவதால், இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது' என, கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த இளையராஜா தரப்பு, 'அவர் புகைப்படத்தை, பெயரை, வணிக ரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர். இது, அவரது தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் செயல் என்பதால், சமூக வலைதளங்களில், ரீல்ஸ், மீம்ஸ்களில் அனுமதியின்றி, அவரது புகைப்படம் பயன்படுத்தப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.