உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழில் பெயர் பலகை வைக்க அவகாசம்; விண்ணப்பத்தை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழில் பெயர் பலகை வைக்க அவகாசம்; விண்ணப்பத்தை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 'கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த, அவகாசம் கோரிய விண்ணப்பத்தை நான்கு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும்' என, தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்கும் வரை கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

14,000 பேர்

சென்னை உயர் நீதிமன்றத்தில், மும்பையில் உள்ள இந்திய சில்லரை வர்த்தகர்கள் சங்கம் சார்பில், வெங்கடராமன் என்பவர் தாக்கல் செய்த மனு:எங்கள் சங்கத்தில் நாடு முழுதும், 14,000 சில்லரை விற்பனையாளர்கள் உறுப்பினராக உள்ளனர். தமிழகத்தில் மட்டும், 500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். 'சென்னை மாநகராட்சி உட்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளில், தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும்' என, கடந்த ஏப்ரலில் அறிவிப்பு வெளியானது.சென்னை மாநகராட்சி மற்றும் அனைத்து மாவட்ட அதிகாரிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதில், 'மே, 30க்குள் கடைகளின் பெயர் பலகைகளை, தமிழில் வைக்க வேண்டும். 'தமிழ் பெயருக்கு கீழ், ஆங்கிலத்தில் பெயர் எழுதிக் கொள்ளலாம். மூன்றாவது மொழியில் குறிப்பிட விரும்பினால், ஆங்கிலத்துக்கு கீழ் எழுதிக் கொள்ளலாம். இந்த உத்தரவை செயல்படுத்த தவறினால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டுஉள்ளது.உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வணிக சின்னங்களின் அடிப்படையில், பெயர் பலகைகள் அமைக்க வேண்டும். அவற்றை மாற்றும்பட்சத்தில், அது வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.

மனு அனுப்பினோம்

அரசு உத்தரவை அமல்படுத்த தயாராக உள்ள போதும், நிதி போன்ற காரணங்களால், உடனே அவற்றை மாற்ற இயலாது. எனவே, பெயர் பலகைகளை மாற்ற, கூடுதல் அவகாசம் வழங்கக்கோரி, மார்ச், 19ல் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு மனு அனுப்பப்பட்டது.அதை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு எதிராக, கடும் நடவடிக்கைகள் எடுக்கவும் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நடவடிக்கை கூடாது

இந்த மனு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, ''2 லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து, கடைகளில் பெயர் பலகைகள் பொருத்தப்பட்டு உள்ளன. பெயர் பலகைகளை உடனே மாற்ற கூடுதல் செலவு ஏற்படும். இதை கருத்தில் கொள்ள வேண்டும்,'' என்றார்.இதையடுத்து நீதிபதி, 'மனுதாரர் சங்கத்தின் கோரிக்கை மனுவை, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு நான்கு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும். அதுவரை கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது' என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.

கோர்ட் நேரம் வீணடிப்பு

சென்னை உட்பட மாநிலம் முழுதும் உள்ள கடைகளில், தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது பெரிய வேலை இல்லை. ஓரிரு நாட்களில் மாற்றி விடலாம். இதற்கு கூடுதல் அவகாசம் கேட்டு வழக்கு தொடர்ந்திருப்பது தேவையற்ற செயல். இதனால், நீதிமன்ற நேரம் தான் வீணடிக்கப்படுகிறது. வியாபாரிகள் தாங்களாகவே பெயர் பலகையை மாற்ற முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

krishnan
மே 27, 2025 11:22

ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு கடயோ ஆபிசோ ஒரு உழைப்பாளி அமைப்பான் ..ரோடு பொருக்கி வெட்டி பசங்க , பேர அதில வை இதுல வைன்னு கூவுவான்க


R.RAMACHANDRAN
மே 27, 2025 07:25

வழக்கறிஞ்சர்களுக்கு வாரி வழங்கினால் அற்ப விசயத்தையும் பெரிதாக திரித்து நீதி மன்றங்களில் போராடுவர்.பெயர் பலகைக்கு 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலவு செய்து வைத்துள்ளனர் என்பது நீதி மன்றத்தை ஏமாற்றும் வேலை.இவர்கள் நியாயமான வழக்குகளை ஏழைகளுக்காக நடத்த முன் வருவது இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை