தனியார் மருத்துவமனை வழக்கு; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை : பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பதிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பான உத்தரவை, தமிழக அரசு தாக்கல் செய்யுமாறு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்பட்ட புகார்கள் அடிப்படையில், விசாரணை நடத்திய தமிழக அரசு, திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ஆகியவற்றுக்கான, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆக., 10ம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதை ரத்து செய்ய கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''இந்த மருத்துவ மனைக்கான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமத்தை ரத்து செய்து, ஏற்கனவே அரசு உத்தரவு பிறப்பித்து விட்டது,'' என்றார். இதையடுத்து, அரசு உத்தரவை சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும், 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.